பொது இடங்களில் எந்த கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பொது இடங்களில் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் வைஃபை வசதி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Recommended Video
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பொது இடங்களில் அனைவருக்கும் வைஃபை வசதியை எந்த கட்டணமும் இல்லாமல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது என்றார்.
மேலும் 'பொது தகவல் அலுவலகங்கள்' மூலம் எந்தவித வரி, கட்டணம் இல்லாமல் இந்த பொது வை-பை சேவைகள் வழங்கப்படும். இந்த வசதி பிஎம்-வானி என அழைக்கப்பபடும். இத்திட்டம் நாட்டில் பொது வை-பை நெட்வொர்க் வளர்ச்சியை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தை நடப்பு நிதியாண்டில் ரூ.1,584 கோடி மதிப்பில் மேற்கொள்ளவும், இதே திட்டத்தை 2020-2023 வரை ரூ.22,810 கோடி செலவில் மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் மூலம் 58.5 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு விரிவான தொலைதொடர்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் 2 மாவட்டங்களில் செல்போன் சேவை அளிப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல். இதுவரை இவ்வசதி இல்லாத 2374 கிராமங்களுக்கு செல்போன் சேவைகள் கிடைக்கும்.
கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்துக்கான (பைபர் கேபிள்) திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.