இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! தமிழகத்தின் கோரிக்கைகள் என்னென்ன?
டெல்லி : பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதில் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? தமிழகத்திற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைக் பிடித்துள்ளது. கடந்த ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் மூன்றாவது பாஜக அரசிலும் நிதியமைச்சர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மழைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வழக்கமாக ஜூலை இறுதியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து மழைக்கால கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத்தொடராக நடக்க இருக்கிறது.
நேற்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது. 2024 - 25 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். முன்னதாக நாடாளுமன்றத்தை கூட்டத் தொடரை சமூகமாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜேபி நட்டா உள்ளிட்ட அமைச்சர்களும் காங்கிரஸ், திமுக, திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கலந்து கொண்டன.
இந்த கூட்டத் தொடரில் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, புதிய விமான சட்டம், நிதி மசோதா உள்ளிட்ட ஆறு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும் இச்சட்ட மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. குறிப்பாக நீட் தேர்வு விவகாரம், சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் மூன்று ஆண்டுகள் விடுவிக்கப்படாமல் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த அவர், தாம்பரம் செங்கல்பட்டு இடையேயான மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும், வருமான வரிச் சுமையை குறைக்க வேண்டும், நடுத்தர குடும்பங்களின் பத்தாண்டு கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம், தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பாஜக அரசு தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications