ஆட்டத்தை காட்டிய மத்திய பாஜக அரசு- ராஜீவ் கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேர் விடுதலைக்கு எதிராக மனு!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திடீரென மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது.
1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் ஶ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை வழக்கில் 1998-ம் ஆண்டு 26 தமிழருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தூக்கு தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மட்டும் தூக்கு தன்டணையை உறுதி செய்தது; ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரனின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. எஞ்சிய 18 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

4 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு
அதாவது ராஜீவ் கொலை வழக்கில் 4 பேர் தூக்கு தண்டனையையும் 3 பேர் ஆயுள் தண்டனையையும் அனுபவித்து வந்தனர். பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் கருணை மனு ஜனாதிபதி மாளிகை நீண்டகாலம் முடிவெடுக்காமல் இருந்தது. இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு, கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க காலதாமதமானதை முன்வைத்து 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டையாக குறைத்தது. இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.

பேரறிவாளன் விடுதலை
நீண்டகால சிறைவாசம் அனுபவித்த இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு 7 தமிழர் விடுதலைக்கு எதிராக இருந்தது. அதேநேரத்தில் இவ்வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தனியே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்துவிட்டதையும் அவரது நன்னடத்தையையும் சுட்டிக்காட்டி சிறையில் இருந்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

6 தமிழர் விடுதலை
இதனடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய கோரி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் நவம்பர் 11-ந் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து நளினி உள்ளிட்ட 6 தமிழரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த அத்தனை தமிழரும் விடுதலையாகிவிட்டனர்.

மத்திய அரசு திடீர் மனு
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனையில் இருந்து விடுதலையான நளினி, ரவிச்சந்திரன் இருவர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எஞ்சிய 4 பேரும் ஈழத் தமிழர்கள். அதனால் 4 ஈழ்த் தமிழரும் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 4 பேரும் விரும்பிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார். இந்நிலையில் நளினி உள்ளிட்ட 6 தமிழரை சிறையில் இருந்து விடுதலை செய்யும் உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 11-ந் தேதி உத்தரவுக்கு தற்போது மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நளினி உட்பட 6 தமிழரை விடுதலை செய்யும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய பாஜக அரசு உச்சநிநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications