ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த என்சிபி அதிகாரி மாற்றம்! மத்திய அரசு திடீர் உத்தரவு.. என்ன காரணம்?
டெல்லி: ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் மாற்றப்பட்டுள்ளார். என்சிபி அதிகாரி ஞானேஸ்வர் சிங் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகச் சிலர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரை மத்திய உள் துறை அமைச்சகம் இப்போது திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சுமார் 2000 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தப்பட்டதாகச் சொல்லி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கைத் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. என்சிபி துணை இயக்குநரான ஞானேஸ்வர் சிங் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இருப்பினும், அவர் ஜாபர் சாதிக் விவகாரத்தில் தமிழக போலீசாரை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார். பல்வேறு பேட்டிகளில் இது தொடர்பான கருத்துகளைக் கூறி வந்தார்.
இதனால் ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டதாக ஞானேஸ்வர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், ஜாபர் சாதிக் கைதின் போது பல்வேறு விதிமீறல்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநராக ஞானேஸ்வர் சிங்கை மத்திய அரசு வாபஸ் பெற்று இருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஞானேஸ்வர் சிங் வாபஸ் பெறப்பட்டுள்ளார்.
ஜாபர் சாதிக் உள்ளிட்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வழக்குகள் மற்றும் என்சிபி துணை இயக்குநர் பதவியில் இருந்தும் ஞானேஸ்வர் சிங் திரும்பப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம் எதற்காக இந்த மாற்றம் என்பது குறித்த தகவல்கள் மத்திய அரசின் செய்திக்குறிப்பில் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்த வழக்கை விசாரித்த என்சிபி குழுவிலும் இந்த ஞானேஸ்வர் சிங் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications