ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு உள்ளிட்ட எந்த ஒரு அமைப்புக்குமே அதிகாரம் கிடையாது; மத்திய அரசு மட்டுமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் கொண்டது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில்தான் இன்றும் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்த காலம் முதலே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பது தமிழ்நாட்டின் பிரதான கோரிக்கை.

இதனிடையே பீகார் மாநிலத்தில் ஆளும் ஜேடியூ -ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளது. பீகார் அரசின் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் பாட்னா உயர்நீதிமன்றமோ, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என அனுமதித்தது.
பாட்னா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக 'ஏக் சோச் ஏக் பிரயாஸ் என்ற தன்னார்வ அமைப்பு உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இதனிடையே இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திம் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு அமைப்புக்குமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த எந்த அதிகாரமும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட/ பழங்குடி மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த பிரமாணப் பத்திரம் குறித்து பாஜக எம்பி சுஷில் குமார் மோடி கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மத்திய அரசு மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். இதர அமைப்புகள் ஆய்வுகள் நடத்தலாம். விவரங்களை சேகரிக்கலாம். இந்த ஆய்வுகளும் தரவுகளும் விவரங்களுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதாகிவிடாது. பாட்னா உயர்நீதிமன்றமும் கூட இதையேதான் சொல்லி இருக்கிறது. பீகாரில் என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டதே அதையே உச்சநீதிமன்றத்தில் பாஜக தெரிவித்துள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.
மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் தொடர்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: மத்திய அரசுக்கு எந்த ஒரு புரிதலுமே இல்லை. எப்படி உண்மையை ஒடுக்கலாம், மறைக்கலாம் என்பது மட்டுமே மத்திய அரசு தெரிந்து வைத்திருக்கிறது. மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிராகத்தான் பாஜக இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பதாக இருந்தால் நாடு முழுவதும் நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உத்தரவிடட்டும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications