நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை... தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அரசு பதில்..!
டெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியிருக்கிறார் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர்.
நாடாளுமன்றத்தில் தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதனைக் கூறினார்.
நீட் தேர்வோடு சேர்ந்து மேலும் 3 கேள்விகளையும் மத்திய அரசுக்கு முன்வைத்து அதற்கான பதிலை பெற்றிருக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

தமிழச்சி தங்கபாண்டியன்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு கேள்விக்கணைகள் தொடுத்து வருகின்றன. அந்த வகையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கொரோனா 3-ம் அலை அச்சம் அதிகரித்து வருவதால் நீட் தேர்வு மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை , நிறுத்திவைக்க ஒன்றிய அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா..? என்ற வினாவை முன்வைத்தார்.

நீட் தேர்வு
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர், ஏற்கனவே அறிவித்தப்படி , திட்டமிடப்பட்ட தேதிகளில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடைபெறும் என்றார். கோவிட் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் சில நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.

விளக்கம்
அதோடு மாணவர்களின் பாதுகாப்பை கருதி முககவசம், சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்றும் தேர்வு நிலையங்களுக்கு வெளியே கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் நீட் தேர்வு ஒத்தி வைப்பு, நிறுத்தி வைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை விளக்கியிருக்கிறார்.

மீண்டும் கேள்வி
பிறகு மீண்டும் வினவத் தொடங்கிய தமிழச்சி தங்கபாண்டியன், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசுக்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா..? என்றும் அப்படி இருந்தால், அவற்றின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள், மாநில அரசுகளிடம் உள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications