16-ம் நிதிக் குழு: ஆலோசனைக் குழு நியமனம்-நிதி பகிர்வு பரிந்துரை எப்போது? எதிர்பார்ப்பில் மாநிலங்கள்!
டெல்லி: 16-வது நிதிக்குழுவின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 16-வது நிதிக் குழுதான் மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிப் பகிர்வு உள்ளிட்டவை குறித்த பரிந்துரைகளை அறிக்கைகளாக வழங்கும். 16-வது நிதிக் குழுவின் ஆலோசனை குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில் இடைக்கால பரிந்துரைகள் எப்போது என்பது மாநிலங்களின் எதிர்பார்ப்பு.
நமது நாட்டின் நிதிக் குழுவானது, பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தகைய வருவாயில் அந்தந்த பங்குகளை மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்தல்; பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை மறுஆய்வு செய்து, அதன் மீது பொருத்தமான பரிந்துரைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வில் இந்த நிதிக் குழுவின் பரிந்துரைகள் முக்கியமானவை.

அதாவது மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாயை மானியமாக வழங்குவது மற்றும் மாநிலங்களுக்கு அவர்களின் வருவாயின் உதவி மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகை ஆகியவற்றை பரிந்துரைக்கும். மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி ஆதாரங்களை நிரப்பும் வகையில் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும்.
கடந்த 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வை சற்று குறைத்திருந்தது சர்ச்சையானது. மேலும் மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டு நிதிப் பகிர்வை நிதிக் குழு பரிந்துரைப்பதும் தென் இந்திய மாநிலங்களுக்கு பெரும் அநீதியாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 16-வது நிதிக் குழுவின் தலைவராக 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ல் நித்தி ஆயோகின் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கடந்த ஜனவரி மாதம் நிதிக் குழுவின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, சௌமியா காந்தி கோஷ், அன்னி ஜார்ஜ் மேத்யூ, நிரஞ்சன் ராஜதயாக்ஷா ஆகியோரை மத்திய அரசு நியமித்திருந்தது. 16-வது நிதிக் குழுவானது அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கையை தயார் செய்யும். இது 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஐந்து ஆண்டு காலத்திற்கு பொருந்தும்.
தற்போது 16-வது நிதிக்குழு தனது ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் டாக்டர் டி.கே. ஸ்ரீவத்சவா, நீல்காந்த் மிஸ்ரா, டாக்டர் பூனம் குப்தா, பிரஞ்சுல் பண்டாரி, ராகுல் பஜோரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் டாக்டர் பூனம் குப்தா ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராக இருப்பார். இந்த குழுவும் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு அறிக்கையை எப்போது தாக்கல் செய்யும்? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications