ஆப்கானில் இருந்து இந்தியா திரும்புபவர்களுக்கு போலியோ தடுப்பூசி..மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு இலவசமாக போலியோ தடுப்பூசி போடப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெரும்பாலான நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை வெளியேற்றி வருகினறனர். இந்திய விமானப் படையும் ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்டு வருகிறது.
திங்கள்கிழமை அன்று இந்திய விமானப்படை இந்திய தூதரகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நாட்டுக்கு அழைத்து வந்தது.

இந்திய விமானப்படை
இரண்டாவது இந்திய விமானப்படையின் சி -17 விமானம் செவ்வாய்க்கிழமை காபூலில் இருந்து இந்திய தூதர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிக்கித் தவித்த இந்தியர்கள் உட்பட 150 பேரை வெளியேற்றியது. மொத்தம் 200-க்கும் மேற்பட்ட தூதரக ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காபூலில் இருந்து 107 இந்தியர்கள் உட்பட 168 பேரை இந்திய விமானப்படை இன்று மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தது.

போலியோ தடுப்பூசி
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்கு இலவசமாக போலியோ தடுப்பூசி போடப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்தார். இந்தியா உள்பட பல நாடுகள் போலியோவை ஒழித்து விட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே போலியோ இன்னும் உள்ளது. இதற்காக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமைச்சர் தகவல்
''ஆப்கானிஸ்தான் திரும்புவோருக்கு இலவச போலியோ தடுப்பூசி - OPV & fIPV மூலம் தடுப்பூசி போட முடிவு செய்துள்ளோம், காட்டு போலியோ வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக. பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு சுகாதார குழுவினருக்கு வாழ்த்துகள்'' என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருக்கிறார்.டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பியவர்கள் போலியோ தடுப்பூசிகள் பெறும் புகைப்படத்தையும் அமைச்சர் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கா அனுமதி
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய மக்களை அழைத்து வர இந்தியாவிற்கு தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியர்கள் அழைத்து வரப்படுவது குறிப்பிடத்க்கது.












Click it and Unblock the Notifications