கொரோனா காலத்தில்.. நாட்டில் எவரையும் பிரதமர் மோடி பட்டினி போடவில்லை.. மன்சுக் மாண்ட்வியா பேச்சு!
டெல்லி: கொரோனா காலத்தில் யாரும் பட்டினி இருக்கக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி இலவச உணவு தானியங்களை வழங்கினார் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஒருவழியாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் ஏராளாமான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் 3-வது அலைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
கொரோனாவை ஒடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசி என்பதால் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

எதிர்கட்சியினர் அமளி
பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக தடுப்பூசி வழங்கி விட்டு மற்ற மாநிலங்களுக்கு குறைவான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் தடுப்பூசி விவகாரம், கொரோனானால் இறந்தவர்கள் அனைவருக்கும் நிவராண உதவி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடடனர்.

அரசியலுக்கு இடமில்லை
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கொரோனா விவகாரம் குறித்து பேசியதாவது:- கொரோனாவை மத்திய அரசு சிறப்பாக கையாண்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு அரசியலுக்கு இடமில்லை என்று பிரதமர் பலமுறை கூறியுள்ளார். பல மாநிலங்கள் தடுப்பூசிகளுக்கான உலகளாவிய டெண்டரை கோரின. ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அமெரிக்கா நன்றி
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னரரே பிரதமர் மோடி கொரோனா குறித்து மாநிலங்களுக்கு எச்சரித்திருந்தார். பல நாடுகள் மருந்துகளுக்காக இந்தியாவை அணுகின. 130-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்கினோம். முதல் அலை குறித்து அலைய உதவியதற்காக இந்தியாவை நாங்கள் மறக்க மாட்டோம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூட கூறினார்.

வீணாக்கியது யார்?
பல மாநிலங்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் அல்லது 15 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை. அவை வீணாகின. ஆனால் இந்த மாநிலங்களின் பிரதிநிதிகள் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு என்னிடம் கேட்கிறார்கள். நாட்டின் முதல் ஊரடங்கு நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவியது. நாம் வாசுதைவ குட்டம்பகத்தை( உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) நம்புகிறோம்.

யாரும் பட்டினி கிடக்கவில்லை
இதன்படி பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி புரிந்தோம். வரலாற்று காலங்களில் ஒரு தொற்றுநோய் ஏற்பட்ட போதெல்லாம், தொற்றுநோயைக் காட்டிலும் அதிகமான மக்கள் பட்டினியால் இறந்தனர். ஆனால் இந்த கொரோனா காலத்தில் யாரும் பட்டினி இருக்கக்கூடாது என்பதற்காக இலவச உணவு தானியங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார்.

மாநிலத்தின் பொறுப்பு
கொரோனா இறப்புகள் மறைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மன்சுக் மாண்ட்வியா கொரோனா இறப்புகள் தொடர்பான தரவுகள் எல்லாம் மாநிலங்களிடம் இருந்து வருகின்றன. அவர்களின் தரவுகளை நாங்கள் தொகுத்து வெளியிடுகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications