அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் கைது? அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீதான மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக டெல்லி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசும் தற்போது ஒப்புதல் அளித்திருப்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லியில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி முயற்சிக்கிறது. தலைநகர் டெல்லியில் 25 ஆண்டுகளுக்குப் பின் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் நிற்கிறது பாஜக.
இந்த நிலையில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான மதுபான கொள்கை ஊழலை மீண்டும் கையில் எடுத்துள்ளது பாஜக. இந்த வழக்கில்தான் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர். இந்த வழக்குகளில் சிபிஐ, அமலாக்கத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது.
ஆனால் அமலாக்கத்துறை தம்மை கைது செய்த போது உரிய அனுமதி பெறவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர முன்னாள் முதல்வர் என்பதால் டெல்லி துணை நிலை ஆளுநர் அண்மையில் அனுமதி அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி தேர்தல் களம் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications