கனடாவில் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய சீக்கியர்கள்-மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடும் வார்னிங்!
டெல்லி: கனடாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைக் கொண்டாடும் ஊர்வல வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடியது அந்த நாட்டுக்கு நல்லது அல்ல என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1984-ம் ஆண்டு ஜூன் முதல் வாரத்தில்தான் காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரிய பிந்தரன்வாலே உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் பஞ்சாப் பொற்கோவிலுக்குள் நுழைந்த ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அத்துடன் பஞ்சாப் பிரிவினைவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்திரா காந்தி அம்மையார் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைதான் ஆபரேஷன் ப்ளூஸ்டார். இதற்கு பழியாகவே இந்திரா காந்தி அம்மையார், சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் பஞ்சாப் மற்றும் உலக நாடுகளில் பிந்தரன்வாலே ஆதரவாளர்களான சீக்கிய பிரினைவாதிகள், ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கனடாவின் பிராம்ப்டன் நகரில் சீக்கியர்கள் நடத்திய ஊர்வலம் ஒன்றில், இந்திரா காந்தி படுகொலையை சித்தரிக்கும் ஊர்தி ஒன்றை உற்சாக முழக்கங்களுடன் பவனிவர செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவை விட்டு தப்பி ஓடிய பஞ்சாப் பிரிவினைவாதிகள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் அரசியல் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கிருந்தபடியே இந்தியாவில் மீண்டும் பிரிவினைவாதத்தை தூண்டவும் முயற்சித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகவே இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடுகிற ஊர்தி சம்பவமும் பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த பிரச்சனை கனடா நாட்டுக்கு நல்லது அல்ல. கனடா, இந்திய உறவுகளுக்கும் ஆரோக்கியமானது அல்ல. இது ஒரு சாதாரண விஷயமாக பார்க்கக் கூடாது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய வேண்டும் என கூறினார். மேலும் இந்தியாவுக்கான கனடாவின் தூதர் கேமரன் மெக்கேவும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications