டெல்லி சேவைகள் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதா- லோக்சபாவில் இன்று அமித்ஷா தாக்கல் செய்கிறார்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகாரங்களை வழங்கும் அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு செயல்பட்டு வருகிறது. டெல்லி நாட்டின் தலைநகரம் என்பதால் யூனியன் பிரதேச அரசுக்கும் (மாநில அரசு) மத்திய அரசுக்கும் இடையே அதிகாரங்கள் தொடர்பான மோதல் இருந்து வருகிறது. டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையேயான மோதல் உச்சநீதிமன்றத்துக்கும் போனது.

டெல்லி விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என அதிரடியான தீர்ப்பை கொடுத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அத்துடன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்ததால் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு மாற்றாக நாடாளுமன்ற இரு சபைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும் என்பது மரபு. ஆகையால் டெல்லி சேவைகள் தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தது. லோக்சபாவில் இம்மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். மத்திய அரசின் இப்புதிய மசோதாவானது, அதிகாரிகள் நியமனம் -மாறுதல்கள் தொடர்பான மாநில முதல்வரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் திருத்தப்பட்டுள்ளன. இம்மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்திருந்தது.
மத்திய அரசின் இந்த மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் எனபதற்காக நாடு முழுவதும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு மாநிலமாக சென்று பிரதான கட்சிகளின் தலைவர்களின் ஆதரவை கேட்டுப் பெற்றார். மத்திய அரசின் இம்மசோதாவை காங்கிரஸ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பதில் உறுதியாக உள்ளன.
ஆனால் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மத்திய பாஜக அரசின் இந்த மசோதாவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது. அதேபோல ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளமும் இம்மசோதாவை ஆதரிக்கக் கூடும். ஆகையால் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி மத்திய அரசின் டெல்லி சேவைகள் தொடர்பான மசோதா நிறைவேறும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications