விவசாயத்திற்கு எதிரான மசோதா.. மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் ராஜினாமா.. ஷிரோமணி அகாலி தளம் அறிவிப்பு!
டெல்லி: ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விவசாய துறை தொடர்பாக இரண்டு முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, பண்ணை மசோதா ஆகிய மசோதாக்கள் மீது இன்று விவாதம் நடந்தது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கி முக்கியமான கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மசோதாக்கள் காரணமாக விவசாய துறை தனியார் மையமாகும், விவசாயிகள் கடும் இழப்பை சந்திப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக ஹரியானா, பஞ்சாப்பில் விவசாயிகள் பலர் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
ஒரு வாரதத்திற்கும் மேலாக அங்கு விவசாயிகள் தீவிரமாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார். இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கி எதிராக செயல்படுகிறது. விவசாயிகள் நலனே எங்களுக்கு முக்கியம். அதனால் நான் ராஜினாமா செய்கிறேன்.
ஷிரோமணி அகாலி தளம் கட்சி பாஜக கூட்டணியில் நீடிக்கும். ஆனால் இந்த மசோதாவிற்கு ஆதரவ அளிக்காது என்று ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இவர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணியில் ஷிரோமணி அகாலி தளம் கட்சி நீடிக்கும் என்று ஹர்சிம்ரத் கெளர் பாதலின் கணவர் மற்றும் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதல் உறுதி செய்துள்ளார்.
முன்னதாக இந்த மசோதாவை ஷிரோமணி அகாலி தளம் ஆதரித்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.