8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்.. கர்நாடக ஆளுநராக மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நியமனம்
டெல்லி: மத்திய அமைச்சரவை மிக விரைவில் மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கர்நாடகா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா 2ஆம் அலையில் இந்திய மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசின் செயல்பாடுகளைப் பலரும் விமர்சித்தனர்.
இதையடுத்து மத்திய அரசின் மீது விழுந்த அவப்பெயரை நீக்கும் வகையில் பாஜக பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமைச்சரவை மாற்றம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நீண்ட காலமாகவே மாற்றப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், மிக விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் எனத் தகவல் வெளியானது. அதற்கேற்ப கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடியை மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்
புதிய அமைச்சரவையில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் எட்டு மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக ஆளுநராகும் மத்திய அமைச்சர்
அங்குக் கர்நாடகா, ஹரியானா, திரிபுரா, இமாச்சல் பிரதேசம், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ள தாவர்சந்த் கெலாட் தற்போது கர்நாடகா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மிசோரம் மாநில ஆளுநராக உள்ள ஸ்ரீதரன் பிள்ளை கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆளுநர்கள்
ஹரியானா ஆளுநராக உள்ள சத்யதேவ் நாராயன் ஆரியா திரிபுரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திரிபுரா ஆளுநராக இருந்த ரமேஷ் பயஸ் ஜார்க்கன்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சல் பிரதேச ஆளுநராக உள்ள பண்டாரு தத்தாத்ரேயா ஹரியானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநர்கள் நியமனம்
மிசோரம் மாநில ஆளுநராக ஹரி பாபு நிமியக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல இமாச்சல் பிரதேசத்தில் புதிய ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications