உன்னாவ்.. 3 தலித் சிறுமிகள் கை, கால்களை கட்டி கொடூரம்.. வாயில் ஏன் வடிந்தது 'நுரை'? விசாரணை தீவிரம்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், 2 தலித் சிறுமிகள் கை, கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பாலியல் பலாத்கார சம்பவங்களால் நாடு முழுக்க கெட்ட பெயரை சம்பாதித்த மாவட்டம் உன்னாவ். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் இரவோடு இரவாக அந்த பெண் உடலை எரித்தது இன்னும் பதற்றத்தை அதிகரித்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உன்னாவுக்கு சென்றதால் அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பு நிலவியது.

டீனேஜ் சிறுமிகள்
இப்போது அதே உன்னாவ் மாவட்டத்தில் ஒரு வயல் வெளியில் டீனேஜ் வயதைசேர்ந்த இரு சிறுமிகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இருவரது கைகளும், கால்களும் துணிகளால் கட்டப்பட்டிருந்தன. 17 வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 பேருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகும்.

தீவனம்
அசோகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாபுரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வயல் வெளிக்குச் சென்ற சிறுமிகள் வீடு திரும்பாததால் அவர்கள் குடும்பத்தார் தேடியலைந்தனர். அப்போதுதான் இந்த சோக சம்பவம் குறித்து தெரியவந்தது.

வாயில் வெள்ளை திரவம்
இதுபற்றி உன்னாவ் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுரேஷ்ராவ் குல்கர்ணி கூறுகையில், சிறுமிகள் வாயில் வெள்ளையாய் ஏதோ திரவம் வடிந்தபடி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

விஷம் கொடுத்துள்ளார்கள்
சிறுமிகள் உடல்களில் காயங்கள் இல்லை என்று காவல்துறை தெரிவிக்கிறது. ஆனால் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள் மருத்துவர்கள். சிகிச்சை பெற்றுவரும் சிறுமி நரம்பு சிஸ்டம் பாதிக்கப்பட்டுள்ளது. விஷம் உடலில் ஏற்கனவே வேலை செய்ததன் விளைவுதான் இது என்கிறார்கள். எனவே அந்த சிறுமியை காப்பாற்றுவது கஷ்டம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

6 தனிப்படைகள்
சிறுமிகளின் சகோதரர் விஷால் நிருபர்களிடம் கூறுகையில், தனிப்பட்ட யாரையும் நாங்கள் சந்தேகப்படவில்லை. யாருடனும் எங்களுக்கு பகையில்லை. எப்படி இந்த அநியாயம் நடந்தது என தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க போலீசார் 6 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications