2022-ல் 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள்.. நெருப்பை கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கும் பாஜக!
டெல்லி: 2022-ம் ஆண்டில் பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 7 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் பல மாநிலங்களில் கடும் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியது இருப்பதால் இப்பொழுதே பாஜக தேர்தல் வியூகங்களில் களமிறங்கி இருக்கிறது.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. ஆண்டின் இறுதியில் இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபைகளுக்குத் தேர்தல் நடைபெறும்.
கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் பாஜக ஆட்சிகள் தற்போது உள்ளன. ஆனால் மீண்டும் இந்த மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாத சூழ்நிலைதான் உள்ளது. கோவா, மணிப்பூரில் கொல்லைப்புறமாகத்தான் பாஜக ஆட்சியைப் பிடித்தது.

உ.பி. பாஜக அரசு மீது அதிருப்தி
உத்தரப்பிரதேசத்தில் தனிக்காட்டு ராஜாவாக பாஜக இதுவரை வலம் வந்தது உண்மைதான். ஆனால் இம்மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாக திறமை இன்மை, பாஜகவுக்குள்ளேயே மிக மோசமான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தவறிவிட்டது யோகி அரசு என்பதில் பாஜக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி,க்கள் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் அதிருப்தி
அதேபோல் ஜாதிய அடிப்படையிலான அதிருப்தி அலைகளும் பாஜகவுக்கு எதிராக உ.பி.யில் உள்ளது. காலந்தோறும் பிராமணர் ஒருவரை முதல்வராக்கிய பாஜக தாக்கூர் ஜாதியை சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்கிய கோபமும் இருக்கிறது. இப்படி பல முனைகளிலும் பாஜகவுக்கு எதிர்ப்பு நிலவுகிறது. ஏறத்தாழ இதே நிலைமையில்தான் உத்தரகாண்ட் கள நிலவரமும் இருக்கிறது. இதனை சரிகட்டுவதற்காக இப்போதே களமிறங்கிவிட்டது பாஜக.

தேர்தல் பணி
உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கடந்த வாரம் சென்றிருந்த பாஜக பொதுச்செயலாளர் சந்தோஷ், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமையன்று உத்தரப்பிரதேசத்துக்கும் சென்ற சந்தோஷ், அங்கு கட்சி கட்டமைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நிலவரம் குறித்து தொடர்பாக மாநில அமைச்சர் ஜெய் பிரதாப் சிங்குடனும் சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.

களத்தில் ஆர்.எஸ்.எஸ்.
இதே போல் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் ஏற்கனவே கடந்த வாரம் உத்தரப்பிரதேசம் சென்று ஆலோசனை நடத்தினர். அடுத்ததாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்று தேர்தல் களப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்த போதும் பாஜகவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் தொடர்பான அச்சம்தான் இப்போது முதன்மையானதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications