சாம்பலில் இருந்து பீனிக்ஸாக உயிர்த்தெழ துடிக்கும் காங்.- உ.பி. தலைவர்களுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை
டெல்லி: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என நம்பிக்கையோடு இருக்கிறது. இருந்தபோதும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதான அதிருப்தியை சமாளிக்கும் நடவடிக்கைகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.
எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டன. அதாவது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதுதான் இந்த அறிவிப்பு. காங்கிரஸ் கட்சியும், தனித்தே தேர்தலை சந்திப்போம் என்கிறது.

காங். தனித்தே போட்டி
அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுகிற வலிமையுடன் காங்கிரஸ் இருக்கிறது; உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆட்சியை அமைக்கும். பிரியங்கா காந்தியின் கண்காணிப்பில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்கிறோம் என அறிவித்திருந்தார்.

பரிதாப உ.பி. காங்கிரஸ்
ஆனால் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் சீட்டுகளாவது கிடைக்குமா? என்கிற நிலைமைதான் உள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா குடும்பத்தின் கோட்டைகளான ரேபரேலி, அமேதி என பல இடங்களில் ஜில்லா பரிஷத் தலைவர் பதவிகளை பா.ஜ.க அள்ளியது.

களமிறங்கிய பிரியங்கா காந்தி
இதனால் உ.பி. காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுத்தாக வேண்டிய நெருக்கடி அக்கட்சி மேலிடத்துக்கு உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை சந்தித்து பேசியிருந்தார். உ.பி.யில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்டது. உ.பி. தேர்தலில் பூபேஷ் பாகல், காங்கிரஸ் கட்சிக்கு மிக முக்கியப் பங்காற்றுவார் எனவும் கூறப்படுகிறது.

உ.பி. தலைவர்களுடன் ஆலோசனை
இந்நிலையில் இன்று உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். உ.பி. மாநில தலைவர் அஜய் குமார் லல்லு, மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், ராஜீவ் சுக்லா, பிரமோத் திவாரி, ரஷீத் ஆல்வி என பலரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் உ.பி. சட்டசபை தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தேர்தல் வியூகம்
அப்போது, விலைவாசி உயர்வால் விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்களை பிரியங்கா காந்தி விவரித்தார். உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் வன்முறைகள் கட்டவழித்துவிடப்பட்டதையும் பிரியங்கா சுட்டிக்காட்டினார். இவற்றை எல்லாம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பிரியங்கா அறிவுறுத்தினார். உ.பி.யின் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைவர்க்கள் விவரித்தனர் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications