தொடரும் அச்சுறுத்தல்.. உ.பி.யில் சீன உளவாளி அதிரடி கைது.. பாகிஸ்தானுக்கு தகவல் தந்தாரா?
பொதுவாக, வடகிழக்கு பகுதிகளான மேகாலயா, அசாம், மிசோராம், மணிப்பூர் மாநில மக்களின் முக ஜாடை, சீன நாட்டவருடன் ஒத்திருப்பதால் சீன உளவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி: டெல்லியில் தங்கியிருந்து பல முக்கிய இடங்களை உளவு பார்த்து வந்த சீன உளவாளியை உத்தரபிரதேச போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்தியாவுக்குள் சீன ராணுவம் அவ்வப்போது அத்துமீறி நுழைவதும், நமது ராணுவ வீரர்களை தாக்குவதும் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியாவை உளவுபார்க்கும் பணியிலும் அந்நாடு ஈடுபட்டு வருவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புதான் சீனாவை சேர்ந்த பெண் உளவாளி கைது செய்யப்பட்ட சூழலில், தற்போது மற்றொரு உளவாளியும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவை எதிரியாக கருதும் சீனா
ஆசிய பிராந்தியத்தில் தனக்கு கிட்டத்தட்ட சமமாக வளர்ந்து வரும் இந்தியாவை, தனது எதிரியாகவே சீனா கருதுகிறது. மேலும், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம், லடாக் ஆகிய மாநிலங்களை கைப்பற்றவும் அந்நாடு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்த முயற்சிகளை முறியடிப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு முறையும் சீனாவுக்கு மறக்க முடியாத பாடத்தை நமது ராணுவ வீரர்கள் புகட்டி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கூட, அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைந்த சீனப் படையினரை நமது ராணுவத்தினர் துரத்தியடித்தனர்.

எதிரிக்கு எதிரி நண்பன்
இதனால், இந்தியாவுடன் தனியாக மோதுவதை விட இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானுடன் சேர்ந்து குடைச்சல் தர சீனா முடிவு செய்துள்ளது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ஃபார்முலாவை கையில் எடுத்துள்ள சீனா, பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கியது. மேலும், இந்தியாவை தாக்க அதிநவீன ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. மேலும், பாகிஸ்தானில் தனது ராணுவத் தளங்களையும் சீனா நிறுவி வருகிறது.

சீன உளவாளி கைது
இந்நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா தனது ஆட்கள் மூலம் உளவு பார்த்து வருவது அதிகரித்துள்ளதாக இந்திய உளவு அமைப்புகள் எச்சரித்து வருகின்றன. அந்த வகையில், உத்தரபிரதேச - நேபாள எல்லைப் பகுதி அருகே உள்ள லக்கிம்பூர்கேரியில் சந்தேகத்துக்கிடமாக ஒரு இளைஞர் சுற்றித்திரிவதை நேற்று முன்தினம் போலீஸார் பார்த்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் சீனாவை சேர்ந்த உளவாளி என்பதும், டெல்லியில் இரண்டு வாரங்களாக தங்கியிருந்து உளவு பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவரது பெயர் வாங் கவுஜுன் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பினாரா?
டெல்லியில் பல முக்கிய இடங்களுக்கு சென்று அந்த இடங்களை தனது செல்போனிலும் புகைப்படம் எடுத்துள்ளார் வாங் கவுஜுன். இந்த புகைப்படங்களை சீனாவுக்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கும் அவர் அனுப்பியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரிடம் 'ரா' உளவு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இருந்து தாய்லாந்து வந்த அவர், அங்கிருந்து நேபாளம் வழியாக பஸ்ஸில் உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்து டெல்லி வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பொதுவாக, வடகிழக்கு பகுதிகளான மேகாலாயா, அசாம், மிசோராம், மணிப்பூர் மாநில மக்களின் முக ஜாடை, சீன நாட்டவருடன் ஒத்திருப்பதால் சீன உளவாளிகளை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications