ஒரே மாநிலத்தில் இருந்து இத்தனை அமைச்சர்களா.. மத்திய அமைச்சரவையில் அதிகாரம் செலுத்தும் உ.பி!
Recommended Video
டெல்லி: மத்திய அமைச்சரவையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த எம்பிக்களுக்கே அதிகளவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிபெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றது பாஜக.
இந்நிலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முறைப்படி ஆட்சி உரிமையை பெற்றது அந்தக்கட்சி. பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றார்.

57 அமைச்சர்கள்
அவரை தொடர்ந்து அவரது அமைச்சரவையும் பதவியேற்றது. மோடியின் அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

மோடியே உ.பி.தான்
இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் அதிக அமைச்சர்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் மாநிலம் பெற்றுள்ளது. அதுமட்டுமா பிரதமரை கொடுத்த மாநிலம் என்ற பெருமையும் உத்தரப்பிரதேசத்துக்கே கிடைத்துள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதை நினைவு கூற தக்கது.

10 அமைச்சர்கள்
மோடி சர்க்கார் 2 மத்திய அமைச்சரவையில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் அதிகளவாக 10 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிரா மாநிலம் மத்திய அமைச்சரவையில் 7 இடங்களைப் பெற்றுள்ளது.

6 அமைச்சர்கள்
அதனைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திற்கு மத்திய அமைச்சரவையில் 6 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தலா 3 இடங்கள் மத்திய அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ளன.

தலா 2 அமைச்சர்கள்
மேற்குவங்கம், ஒடிசா, மத்தியப்பிரதேசத்திற்கு தலா 2 இடங்கள் மத்திய அமைச்சரவையில் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்கள் மொத்த தொகுதிகளையும் பாஜகவுக்கே வாரி வழங்கின. இந்த மாநிலங்களில் வேறு எந்த கட்சிகளும் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.

பாபுல், தேவஸ்ரீ
2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள மேற்குவங்கம் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 18 இடங்களை கொடுத்துள்ளது. அம்மாநிலத்தில் இருந்து பாபுல் சுப்ரியோ, தேவஸ்ரீ சவுத்ரி ஆகிய இரண்டு பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஏழை அமைச்சர்
ஒடிசாவில் 8 இடங்களை கைப்பற்றிய பாஜக அம்மாநிலத்திற்கு தர்மேந்திர பிரதான் மற்றும் பிரதாப் சந்திர சாரங்கி ஆகிய 2 அமைச்சர்களை வழங்கியுள்ளது. இதில் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபா உறுப்பினர் ஆவார்.

வடகிழக்கு மாநிலங்கள்
புதிய அமைச்சரவையில் ஆந்திரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்த், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து மட்டும் 10 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உ.பி 62 எம்பிக்கள்
பிரதமர் மோடியையும் தவிர்த்து ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, மகேந்திரநாத் பாண்டே, சஞ்ஜீவ் பாண்டே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, விகே சிங், சந்தோஷ் கங்வார், ஹர்தீப் சிங் புரி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோர் ஆவர். உத்தரப்பிரதேசத்தில் பாஜக இம்முறை 62 தொகுதிகளில் வெற்றி பெற்று எம்பிக்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா, பீகார்
மகாராஷ்டிராவில் இருந்து நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், அரவிந்த் சாவந்த், தன்வே பாட்டீல், ராம்தாஸ் அத்வாலே மற்றும் ஷாம்ராவ் தோத்ரே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் இருந்து ராம்விலாஸ் பஸ்வான், ரவி சங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், ஆர்கே சிங், அஸ்வினிகுமார் சவுபே, நித்தியானந்த் ராய் ஆகியார் பதவியேற்றுள்ளனர்.

அதிக எம்பிக்கள்
நாடாளுமன்றத்திற்கு அதிக எம்பிக்களை கொடுக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதலில் உள்ளது உத்தரப்பிரதேசம், அதற்கு அடுத்த படியாக மகாராஷ்டிரா 48 எம்பிக்களையும் பீகார் 40 எம்பிக்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications