குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் மோடியை சிக்கவைக்க எனக்கு சிபிஐ நெருக்கடி: அமித்ஷா பரபர புகார்
டெல்லி: குஜராத் போலி என்கவுண்ட்டர் வழக்கில் அப்போது மாநில முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை சிக்க வைக்க தமக்கு சிபிஐ அழுத்தம் கொடுத்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அந்த பதில்கள்: மத்திய பாஜக அரசுதான் விசாரணை ஏஜென்சிகளை துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போலி என்கவுண்ட்டர் வழக்கில் சிபிஐ என்னை கைது செய்தது. அப்போது அந்த வழக்கில் குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடியை சிக்க வைக்க எனக்கு நெருக்கடி தந்தது சிபிஐ. ஆனால் இதுபற்றி பாஜக எங்கேயும் பிரச்சனை எழுப்பியது இல்லை.

மோடி சமூகம் குறித்த ராகுல் காந்தியின் அவதூறு பேச்சுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ராகுல் காந்தி மட்டும்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஒரே ஒரு அரசியல் தலைவரும் அல்ல; ராகுல் காந்திதான் பதவி இழந்த ஒரே மக்கள் பிரதிநிதியும் அல்ல. கீழ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தால் உயர்நீதிமன்றத்தில் முறையிடுவதுதான் வழக்கம். ஆனால் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யாமல், பிரதமர் மோடி மீது பழிபோட்டு விமர்சித்து வருகிறார். ஆகையால் ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுதான் வழியாக இருக்கும். ஆனால் ராகுல் காந்தி ஆணவத்துடன் நடந்து கொள்கிறார். நீங்கள் எம்பியாகத்தான் இருக்க வேண்டும் என விரும்பினால் முதலில் நீதிமன்றம் போக வேண்டும். இதில் எங்கே அரசியல் பழிவாங்குதல் இருக்கிறது? காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அதென்ன போலி என்கவுண்ட்டர் வழக்கு?
குஜராத் போலீசாரால் கடந்த 2005-ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் சொராபுதீனுக்குத் தொடர்பு உள்ளது என்றும் குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட தலைவர்களைப் படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார் என்றும் கூறியது குஜராத் போலீஸ். ஆனால் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த சொராபுதீனையும், அவரது மனைவியையும் போலீஸார் கடத்தி வந்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இந்த சம்பவத்தை போலி என்கவுன்ட்டர் என சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.குஜராத் போலீஸின் இந்த போலி என்கவுன்ட்டரை நேரில் பார்த்த துளசி பிரஜாபதியும் 2006-ம் ஆண்டு என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கும், போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்ற போது சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்த இரு என்கவுண்ட்டர்களுக்கும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாதான் உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இதனால் அமித்ஷாவை சி.பி.ஐ. 2010-ம் ஆண்டு கைது செய்தது. 2010-ம் ஆண்டு அமித்ஷாவை கைது செய்த சிபிஐ டீமின் தலைவராக இருந்தவர் டிஜிபி கந்தசாமி. தற்போது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications