திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும்.. ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தகவல்
டெல்லி: சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஏபிபி- சிவோட்டர் கருத்துக்கணிப்பில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது.

கூட்டணி கணக்கு
தற்போது ஆளும்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக இந்த முறை கூட்டணி அமைத்துள்ளது. இரு கட்சிகளும் 170க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இது தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

ஏபிபி கருத்துக்கணிப்பு
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஏபிபி- சிவோட்டர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைக்கும்
இதில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 43% வாக்குகளுடன் திமுக 161-169 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 206ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி 39% வாக்குகளுடன் 98 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

அதிமுக நிலை என்ன
அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி 53 முதல் 61 இடங்கள் வரை வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி 30.6% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் ஏபிபி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக 40.88% வாக்குகளுடன் 136 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதர கட்சிகள் நிலை என்ன
அதேபோல இந்த முறை மற்ற கட்சிகள் குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. கமல் ஹாசின் மக்கள் நீதி மய்யம் 2-6 (7% வாக்கு) தொகுதிகள் வரையும், டிடிவி தினகரனின் அமமுக 1-5(6.4% வாக்கு) தொகுதிகளிலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இதர கட்சிகள் 12.3% வாக்குகளுடன் 3-7 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications