எல்லாமே போச்சே.. சர்ச்சை நாயகி பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்வு ரத்து.. யுபிஎஸ்சி அதிரடி உத்தரவு
டெல்லி: தோண்ட தோண்ட பூதம் வந்த கதையாக சர்ச்சையில் சிக்கிய இளம்பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்வு செல்லாது என்றும், அவர் வரும் காலத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதவும் தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பின்னணியை பார்த்தால் பூஜா கேத்கரின் இன்னொரு நூதன மோசடி அம்பலமாகி இருப்பது தான் முக்கிய காரணமாகும். அந்த மோசடி தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பூஜா கேத்கர். இவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று 2022ல் பணியில் சேர்ந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட உதவி கலெக்டராக இருந்த நிலையில் சர்ச்சையில் சிக்கினார்.

அதாவது சொந்த ஆடி காரில் சைரன் வைத்தார்.மேலும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கரும் ஒட்டினார். இதுதவிர பயிற்சி பணியில் இருக்கும் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கூட அவர் பிற வசதிகளை கேட்டுள்ளார். அதாவது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான சலுகைகளை அவர் கேட்டார்.
அதன்படி பூஜா கேத்கர் தனக்கு என்று தனி அலுவலகம், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கேட்டார். இதையடுத்து அவர் வாஷிம் பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு சூப்பர்நியூமரரி உதவி கலெக்டராக செயல்பட்டு வந்தார். அப்போது இன்னொரு விஷயம் சர்ச்சையானது. அதாவது பூஜா கேத்கரின் தந்தை அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவை சேர்ந்தவர் எனக்கூறியும், பார்வை மற்றும் மனஇறுக்க பிரச்சனை உள்ளதாக தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பூஜா கேத்கர் பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் முசோரி லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு திரும்ப அழைத்து கொள்ளப்பட்டார். இதுதொடர்பாக மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளர் மனோஜ் திவிவேதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி வந்தது.
இதுஒருபுறம் இருக்க புகார்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பூஜா கேத்கருக்கு யுபிஎஸ்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க ஜூலை 25ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகு பூஜா கேத்கரின் கோரிக்கையை ஏற்று காலஅவகாசம் என்பது ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் தன்தரப்பு விளக்கத்தை அளிக்கவில்லை.
இதற்கிடையே தான் பூஜா கேத்கர் பற்றிய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அவர் தேர்வு விதிகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை பூஜா கேத்கர் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் தனது அடையாளங்களை மறைத்து யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐஏஎஸ்ஸாக தேர்வானது தெரியவந்தது. இதையடுத்து தான் பூஜா கேத்கரின் தேர்வு மற்றும் ஐஏஎஸ் பணிக்கு அவர் தேர்வானதை அதிரடியாக யுபிஎஸ்சி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் அவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதவும் யுபிஎஸ்சி தடைப்பிறப்பித்துள்ளது. இதன்மூலம் பூஜா கேத்கர் இனி ஐஏஎஸ் இல்லை. மேலும் அவரது இந்த மோசடி தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications