கொரோனா பரவல் இரண்டாம் அலை... இந்த அறிகுறிகள் இருக்கிறதா... அப்போ உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் தென்படும் வேறு சில புதிய அறிகுறிகள் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவிற்குள் நுழைந்து ஓர் ஆண்டிற்கு மேலாகிறது. வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் அலை முதல் அலையைக் காட்டிலும் மிக மோசமாக நாட்டில் பரவி வருகிறது. இந்தியா தற்போது கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. மரபணு மாறிய கொரோனா நோயால் பொதுவாக எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துவார்கள் என்பது குறித்து நியூஸ் 18 தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுவான அறிகுறிகள்
கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக சில அறிகுறிகள் இருக்கும். அதாவது வறட்டு இருமல், காய்ச்சல், எவ்வித சுவைகளை மற்றும் வாசனைகளை உணர முடியாமல் போவது ஆகியவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. இருப்பினும் தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய வைரஸ் வகைகளுக்கு வேறு சில அறிகுறிகளும் உள்ளன.

காய்ச்சல்
இந்த மரபணு மாறிய கொரோனா வைரஸ் நம் உடலின் முக்கிய பாகங்களில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியிலிருந்து தப்பித்து அவற்றைத் தாக்கும் வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன. முதலில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றில் காய்ச்சல் என்பது முக்கிய அறிகுறியாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பரவும் உருமாறிய கொரோனாவில் காய்ச்சல் முக்கிய அறிகுறியாக உள்ளது.

புதிய அறிகுறிகள் என்ன
இது தவிர காதுகேளாமை, தசை வலி, தோல் நோய்கள், பார்வை சிதைவு, வயிற்று வலி, வெண்படல அழற்சி போன்ற சில அறிகுறிகளும் புதிய வகை கொரோனாக்களில் மிகவும் பொதுவான அறிகுறிகளாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தொண்டை வலி, தலைவலி, தடிப்புகள், வயிற்று வலி, விரல்கள் மற்றும் கால்விரல்கள் நிறமாற்றம் ஆகியவையும் கூடுதலாக கொரோனா அறிகுறிகளாக உள்ளன என உஜலா சிக்னஸ் குழும மருத்துவமனைகளின் நிறுவன இயக்குநர் டாக்டர் சுச்சின் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா வேகமாகப் பரவுகிறதா
புதிய ஆய்வுகளின்படி, பிரிட்டன் வகை கொரோனா மற்ற வகைகளை விட எளிதாகவும் விரைவாகவும் பரவுகிறது. இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், ஒரு முதன்மை நோயாளியால் இந்த முறை அதிக பேர் பாதிக்கப்படுகிறார்கள். முன்பு ஒருவரிடம் இருந்து அவரது தொடர்புகளில் உள்ள 30-40% பேருக்கு வைரஸ் பரவியது. ஆனால் தற்போது, தொடர்பிலுள்ள 80-90% பேருக்கு வைரஸ் பரவுகிறது என்று கூறினார்.

உருமாறிய வைரஸ்
அதாவது இந்த வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70 சதவீதம் வரை ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்களுக்கு இருமல், சோர்வு, தசை வலி, தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தென்படுகிறது. அதேபோல தென்னாப்பிரிக்க வகை கொரோனாவும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசிகளை மாற்றியமைக்க வேண்டுமா
பிரிட்டன் கொரோனா வைரசும் தற்போது தடுப்பூசிகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதிய வகை கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யும் வகையில் மாடர்னா மற்றும் ஃபைசர் நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசிகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட தொடங்கியுள்ளன. பல்வேறு ஆய்வுகளின்படி மூன்று வகை கொரோனாக்களும் ஒரே மரபணு மாற்றத்தைக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

மாற்றியமைப்பதில் என்ன சிரமம்
கொரோனா தடுப்பூசிகளின் வேதியியல் கலவையைத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவது எளிதான பணியாகத் தெரிந்தாலும், இதை மேற்கொள்ள 4 முதல் 5 மாதங்கள் வரை ஆகலாம். மேலும், இந்த புதிய கொரோனா தடுப்பூசியை மக்களிடம் சோதனை செய்ய வேண்டும். இந்த புதிய தடுப்பூசியின் தடுப்பாற்றல் மாறவும் வாய்ப்பு உள்ளது.

காரணம் என்ன
கொரோனா வழிகாட்டுதலைப் பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதே வைரஸ் பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் என மருத்துவர் கவுரி அகர்வால் தெரிவித்துள்ளார். அதேபோல மரபணு மாறிய கொரோனாவும் வைரஸ் பரவலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மரபணு மாறிய வைரஸ் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications