இந்தியா வரும் அமெரிக்காவின் முக்கிய புள்ளி.. சர்வதேச அளவில் நடக்கும் பெரிய மாற்றம்!
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று (மே 23) இந்தியா வருகிறார். ஏற்கெனவே சர்வதேச அளவில் ஈரான்-அமெரிக்கா போர் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய புள்ளி இந்தியா வருவது கவனம் பெற்றிருக்கிறது.
மார்கோ ரூபியோவின் பயணம் குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் இந்தியா டுடே ஊடகத்திற்கு பிரத்யேக நேர்காணல் கொடுத்திருக்கிறார்.

அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே உள்ள ஆழமான நட்புறவைக் குறிப்பிட்ட தூதர் செர்ஜியோ கோர், "இந்தியாவிற்கும் அதன் பிரதமருக்கும் அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில் ஒரு உண்மையான நண்பர் இருக்கிறார்" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கை என்பது 'அமெரிக்கா மட்டும்' என்று அர்த்தமல்ல என்றும், இந்தியா போன்ற நம்பகமான கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுவதையே அது குறிக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வரும்போது சில மணிநேரங்கள் அல்லது ஒரு நாள் மட்டும் டெல்லியில் தங்கிவிட்டுத் திரும்புவது வழக்கம். ஆனால், மார்கோ ரூபியோ டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய 4 முக்கிய நகரங்களுக்கு 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு மற்றும் மக்களின் அன்பை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் இருநாட்டு உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தவுமே இந்த நீண்ட பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் தற்போது 220 பில்லியன் டாலராக உள்ளது. இதனை 2030-க்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கோர் தெரிவித்துள்ளார்.
மேலும், மே 26 அன்று டெல்லியில் நடைபெறும் குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் மார்கோ ரூபியோ பங்கேற்கிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டு அமைச்சர்களுடன் இணைந்து இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications