இந்தியாவில் ஒருபுறம் அதிகரிக்கும் கொரோனா.. மறுபுறம் தொடர்ந்து குறையும் தடுப்பூசி பணிகள்..காரணம் என்ன
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 2.76 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பதால் தடுப்பூசி பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி பணிகள்
ஆனால், எதார்த்தத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளுக்கு நாள் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் வெறும் 11.66 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகச் சராசரியாக 13.42 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களிலேயே இதுதான் மிகவும் குறைவாகும்.

காரணம் என்ன
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வேகமாக நடக்க வேண்டிய தடுப்பூசி பணிகளும் மந்தமாக நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் 2ஆம் அலையைக் கணக்கிடாமல் மிகக் குறைந்தளவு தடுப்பூசிகளை மத்திய அரசு ஆர்டர் செய்ததாகவும் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மாநில அரசுகள் கொள்முதல்
அதன் காரணமாகவே தற்போது தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, தடுப்பூசி பணிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளை மாநில அரசுகளே கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், குறைவான தடுப்பூசிகளே உற்பத்தி செய்யப்படுவதால், மாநில அரசுகளாலும் தேவையான தடுப்பூசிகளைப் பெற முடிவதில்லை.

மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை
உலகிலேயே இந்தியா உள்ளிட்ட வெகு சில நாடுகளில் மட்டுமே நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி முறை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் தற்போதைய கொள்கைப்படி 45+ மக்களுக்கு மட்டுமே மத்திய அரசு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தும். 18-44 வயது மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பொறுப்புகள் மாநில அரசுகளுடையதாகும்.












Click it and Unblock the Notifications