வந்தே மாதரம் பாடல் இனி கட்டாயம்.. இந்து தெய்வங்களின் பெயருடன் முழு பாடல் பாட வேண்டும் - மத்திய அரசு
டெல்லி: அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைப்பதற்கு முன்பதாக வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக இசைக்க வேண்டும். அப்போது தேசிய கீதத்துக்கு மரியாதை செயல்படுத்துவது போல் வந்தே மாதரம் பாடலுக்கும் அனைவரும் எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்து தெய்வங்களின் பெயர்கள் வருவதை காரணம் காட்டி நீக்கப்பட்ட 4 பத்திகளையும் சேர்த்து பாட வேண்டும் என்று மத்திய அரசு வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ‛‛அனைத்து அரசு நிகழ்வுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாக தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட வேண்டும். ‛வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.

பத்ம விருதுகள் போன்ற அரசு விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும், ஜனாதிபதி பங்கேற்கும் மற்ற விழாக்களிலும் அவர் வரும்போதும், புறப்படும்போதும் இந்தப் பாடல் இசைக்கப்படும்.
திரையரங்குகள் போன்ற பொது இடங்களிலும் 'வந்தே மாதரம்' பாடலை இசைக்கலாம். ஆனால், அங்கே எழுந்து நிற்பது கட்டாயமில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த ‛வந்தே மாதரம்' பாடலுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
வழிக்காட்டு நெறிமுறைகள்
* அதன்படி அரசு நிகழ்ச்சிகள், பள்ளி நிகழ்ச்சிகளில் தேசியகீதத்துக்கு முன்பாக ‛தேச பாடலான' வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும்.
* ஜனாதிபதி, ஆளுநர், துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் அவர்கள் வரும்போதும், புறப்படும்போதும் வந்தேமாதரம் பாடம் இசைக்கப்பட வேண்டும்.
* தேசியக்கொடி அணிவகுப்பிலும் வந்தே மாதரம் பாடல் இடம்பெற வேண்டும்.
* தேசியகீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பது போல் வந்தேமாதரம் பாடலுக்கும் அனைவரும் எழுந்து மரியாதை கொடுக்க வேண்டும்.
முழுமையாக பாட வேண்டும்
* வந்தே மாதரம் பாடலை முழுமையாக நீக்கப்பட்ட 4 பத்திகளுடன் சேர்ந்து இசைக்க வேண்டும்.
* வந்தே மாதரம் பாடலை 190 வினாடிகளில்(3 நிமிடம் 10 வினாடிகள்) பாடி முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேச பாடலாக...
இந்த 'வந்தே மாதரம்' பாடலை பங்கிம் சந்திர சட்டர்ஜி 1875ஆம் ஆண்டு எழுதினார். அவரது பிரபலமான 'ஆனந்தமடம்' புதினத்தின் ஒரு பகுதியாக, சமஸ்கிருதம் கலந்த வங்காள மொழியில் இது உருவானது.
சுதந்திரப் போராட்ட காலத்தில், 'வந்தே மாதரம்' என்பது சுதந்திர போராட்ட வீரர்களின் சக்திவாய்ந்த முழக்கமாக மாறியது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக விளங்கியதுடன், காலப்போக்கில் இந்தியாவின் தேச பாடலாகவும் இது அங்கீகரிக்கப்பட்டது.
ரவீந்திர நாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூர் 1911ம் ஆண்டில், தனது 'பாரத பாக்கிய விதாதா' என்ற கவிதையிலிருந்து 'ஜன கண மன' பாடலை வங்க மொழியில் எழுதினார், அதற்கு இசையமைத்தும் கொடுத்தார். ஜன கண மன பாடலின் வரிகளையும், இசையையும் தாகூரே 'அல்ஹையா பிலாவல்' ராகத்தில் முழுமையாக உருவாக்கினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950ல் இது தேசிய கீதமாக ஏற்கப்பட்டது.
1950 ஜனவரி 24ல் இந்த இரண்டு பாடல்களுமே சுதந்திர இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் ‛ஜன கண மன' பாடலில் மதரீதியான உருவகங்கள் எதுவும் இல்லை. மதச்சார்பற்ற ஒற்றுமையை வலியுறுத்துவதால் வந்தே மாதரத்துக்கு பதில் ஜன கண மன தேசியகீதமானது. ‛வந்தே மாதரம்' தேசிய பாடலாக அறிவிக்கப்பட்டு தேசிய கீதத்திற்குச் சமமாகப் பார்க்கப்பட்டாலும், அதன் முதல் இரண்டு பத்திகள் பொது இடங்களில் பாடும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
இந்து தெய்வங்களின் பெயர்கள்
அடுத்த 4 பத்திகள் நீக்கப்பட்டன. இந்த 4 பத்திகளில் துர்க்கை, லட்சுமி போன்ற தெய்வங்களை பற்றிய குறிப்புகள் இருந்தன. பல மதங்களை கொண்ட இந்த நாட்டில் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்காது என்று ரவீந்திரநாத் கூறியதால் 4 பத்திகள் நீக்கப்பட்டது. தற்போது அனைத்து 6 பத்திகளையும் சேர்த்து படிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
‛வந்தே மாதரம்' பாடல் தொடர்பாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் விவாதம் நடந்ததது. கருத்து மோதல் ஏற்பட்டது. இப்படியான சூழலில் தான் 1937-ல் காங்கிரஸால் நீக்கப்பட்ட நான்கு பத்திகள் உட்பட அனைத்து ஆறு பத்திகளும் இனிமேல் இசைக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications