மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கப்படாதது வெட்கக்கேடானது! மத்திய அரசை வெளுத்து வாங்கிய திருமா!
டெல்லி: பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் வேலை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வெட்கக்கேடானது என நாடாளுமன்றத்தில் பொங்கித் தீர்த்திருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்.
மேலும், நிதி பகிர்விலும் தமிழகத்துக்கு பாரபட்சமான முறையில் மத்திய அரசு நிதி ஒதுக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் திருமாவளவனின் பேசிய விவரம் வருமாறு;

நாட்டில் வறுமை
''நாட்டில் வறுமை அதிகரித்திருக்கிறது, வேலையின்மை அதிகரித்திருக்கிறது, பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து ஏழை எளிய மக்களை கடுமையாக வதைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். அரசின் தவறான பொருளாதார கொள்கைகளாலும் தவறான நிதி மேலாண்மையாலும் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க டாலரோடு இந்திய ரூபாயை ஒப்பிடுகிற போது இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதலபாதாளத்தில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதற்கு பாஜக தலைமையிலான இந்த அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதை முதலில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.''

தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது
''இந்திய மாநிலங்களிலேயே இந்திய ஒன்றிய அரசுக்கு நிதியளிப்பதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கக்கூடிய ஒரு மாநிலமாக அதிக அளவில் நிதி வருவாய் வழங்குகிற மாநிலமாக இருக்கிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதி பகிர்வில் தமிழ்நாடு மிகவும் குறைவான நிதியை தரக்கூடிய நிலையுள்ளது. திட்டமிட்டு வஞ்சிக்கிறதோ என்கிற அளவுக்கு ரயில்வே திட்டங்களாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த திட்டமாக இருந்தாலும் சரி இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது வஞ்சிக்கிறது.''

மதுரையில் எய்ம்ஸ்
''மதுரையிலே எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டது, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இன்னும் வேலை தொடங்கப் பெறவில்லை என்பது உள்ளபடியே வெட்கக்கேடானது. பிரதமரால் தொடங்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட வேலை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது வெட்கக்கேடானதாகும். இந்திய அரசு இந்த விவகாரத்தில் எப்போது மதுரையில் எய்ம்ஸ் கல்வி நிறுவனம் கட்டுவதற்கான பணி தொடங்கும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.''

நதிகள் இணைப்பு
''ஒவ்வொரு முறையும் நதிகள் இணைக்கப்படும் என்கிற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. கோதாவரி - பெண்ணாறு - காவிரி இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட ஒன்று. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அந்த நிதியை ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே நான் வலியுறுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.''

வறுமை ஒழிப்புத் திட்டம்
''வறுமை ஒழிப்புத் திட்டம் என்பது முற்றாக இந்த அரசின் செயல் திட்டத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் 4.6 கோடி பேர் வறுமையில் புதிதாக தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைதான் காரணம் என்று தெரிய வருகிறது. இந்தியாவில் உள்ள பெரிய பணக்காரர்களில் 98 பணக்காரர்களின் சொத்து வரியில் 4% உயர்த்தினால் இந்தியா முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை 17 ஆண்டுகள் நடத்த முடியும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே, அவர்களுக்கான வெல்த் டேக்ஸ்-ஐ குறைக்காமல் அவர்களிடம் வரியை வசூலிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.''

வந்தே பாரத் ரயில்
''சென்னை - மதுரைக்கு இடையே வந்தே பாரத் ரயிலை விட வேண்டும் என்கிற வேண்டுகோளையும் வைத்து வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன். நன்றி வணக்கம்.'' இவ்வாறு திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications