1000 ஏக்கர் நிலம் தேவை.. ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை.. வேதாந்தா முக்கிய அறிவிப்பு
டெல்லி: நாட்டின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை அமைக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது .இந்த ஆலையால் சுமார் 10000 பேருக்கு வேலை கிடைக்கும். அரசுக்கு ஆண்டுக்கு 3000 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறியுள்ள வேதாந்தா. ஆர்வமுள்ளமாநில அரசுகள் விருப்பம் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையானது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய விவகாரத்தில் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மொத்த தாமிரத் தேவையில் ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தியின் பங்கு சுமார் 40%}ஆக இருந்தது. தற்போது மூடப்பட்டுள்ளதால் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

தொழில் அமைப்புகள்
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் பணிகளைத் தொடங்குவதற்கான தீர்வுக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசிடம் தாமிரத்தை பயன்படுத்தும் தொழில் அமைப்புகள் வலியுறுத்தின.

ரூ.10,000 கோடியில் ஆலை
இது ஒருபுறம் எனில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நாட்டின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை அமைக்க வேதாந்தா நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

1,000 ஏக்கர் நிலம் தேவை
வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், : நாட்டின் கடலோரப் பகுதியில் ரூ.10,000 கோடி மதிப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய தாமிர உருக்காலைக்கு சுமார் 1,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த ஆலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

5லட்சம் டன் உற்பத்தி
புதிய ஆலை அமையும் மாநில அரசின் கருவூலத்துக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3,000 கோடி வருவாய் கிடைக்கும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட ஆர்வமுள்ள மாநில அரசுகள் விருப்பம் தெரிவிக்கலாம் என்று வேதாந்தா நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. புதிய ஆலை மூலம் ஆண்டுக்கு 5லட்சம் டன் தாமிரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications