வாகன விபத்து இழப்பீடு.. வாகன ஓட்டிகள் அறிய வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான உத்தரவு
டெல்லி: மோட்டார் வாகன சட்ட பிரிவில் விபத்து நடந்து ஆறு மாதத்திற்குள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியை காரணம் காட்டி இழப்பீடுகள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த விதியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாகன விபத்து இழப்பீடு மனுக்களை கால வரம்பு காரணத்தை கூறி தள்ளுபடி செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 166(3)பின் படி, ஒரு விபத்து நடந்து ஆறு மாதத்திற்குள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த சட்டப்பிரிவு கடந்த 1994ம் ஆண்டு நீக்கப்பட்டிருந்தது.ஆனால் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் மூலம், இந்த 166(3) பிரிவானது, "விபத்து ஏற்பட்ட தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இழப்பீட்டுக் கோரும் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்" என்ற காலவரம்பை மீண்டும் கொண்டு வந்தது. இந்த விதியை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

ஆறு மாத கால அவகாசம் விதி தவறு
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகையில், மோட்டார் வாகனச் சட்டம் என்பது விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நிதி நிவாரணம் வழங்க ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக நலச் சட்டம் ஆகும். ஆனால் இழப்பீடு கோரும் மனுக்களை தாக்கல் செய்வதற்கு ஆறு மாதங்கள் என்ற கடுமையான கால வரம்பை விதிக்கப்பட்டுள்ளதால், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நீதி பெறும் உரிமையை கட்டுப்படுத்தி விடுகிறது.
அடிப்படை நோக்கத்தையே தோற்கடிக்கும்
இதனால் விபத்துகளால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நேரத்தில், மிகக் குறுகிய காலக்கெடு ( 6 மாதம் போதும் என்று) விதிப்பது, இந்தச் சட்டத்தின் நிவாரணம் அளிக்கும் அடிப்படை நோக்கத்தையே தோற்கடித்துவிடுகிறது. இந்த ஆறு மாத காலவரம்பு, பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், நியாயமற்றதாகவும் இருக்கிறது என்று வாதிட்டார்.
இடைக்கால உத்தரவு
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வரை, பின்வரும் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
தள்ளுபடி செய்யக்கூடாது
இதன்படி மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் ஆகியவை, மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 166(3)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலவரம்பு (6 மாதங்கள்) என்ற ஒரே காரணத்திற்காக, இழப்பீட்டுக் கோரிக்கை மனுக்களை தள்ளுபடி செய்யக் கூடாது.
நோக்கம் என்ன
இந்த இறுதித் தீர்ப்பு, நாடு முழுவதும் நிலுவையில் உள்ள பல வழக்குகளைப் பாதிக்கும் என்பதால், அதுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நடைமுறைச் சிக்கலால் நிவாரணம் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வதே உச்ச நீதிமன்றத்தின் நோக்கமாக தெரிகிறது. இந்த இடைக்கால உத்தரவு, காலவரம்பு குறித்த விதியை எதிர்த்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து முடிக்கும் வரை, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு கோரும் உரிமைக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது












Click it and Unblock the Notifications