ரொம்ப கம்மி.. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மிகச் சிலருக்கே வைரஸ் பாதிப்பு.. மத்திய அரசு தகவல்
டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களில் 0.03% பேருக்கும், கோவாக்சின் இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்களில் 0.04% பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. அதன்படி வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
இதன் மூலம் அதிகளவிலான மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மக்களில் ஒரு சாராருக்கு தடுப்பூசி குறித்த சந்தேகம் நிலவுகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டாலும்கூட கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, உயிரிழப்புகள் தடுக்கப்படும் என வல்லுநர்கள் விளக்கமளித்தனர்.

அதிக தடுப்பாற்றல்
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அதிமுக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டவர்களில் 0.04% பேருக்கும் கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களில் 0.03% பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி
முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 87% சுகாதார பணியாளர்களுக்கும் 79% முன்களப் பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Array
மேலும், முதல் மற்றும் இரண்டாம் அலையில் வயது வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 10 வயதுக்குக் குறைவானவர்கள் முதல் அலையில் 4.03% பாதிக்கப்பட்டனர். இது இரண்டாம் அலையில் 2.97%ஆக உள்ளது. 10 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களில் பாதிப்பு 8.07%இல் இருந்து 8.50%ஆக அதிகரித்துள்ளது. மேலும், 20 முதல் 30 வயதுள்ளவர்களிடம் 20.41%ஆக இருந்த பாதிப்பு, இரண்டாம் அலையில் 19.35% ஆக உள்ளது. 30 வயதைத் தாண்டியவர்களில் 67.5%ஆக இருந்த பாதிப்பு, இரண்டாம் அலையில் 69.18%ஆக உள்ளது.

13 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்திய முழுவதும் தற்போது 21.57 லட்சம் கொரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 13 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications