விஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா? வாய்ப்பே இல்லையாமே ராஜா?
டெல்லி: இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா எந்த நேரத்திலும் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்படுவார் என செய்திகள் பரபரக்கின்றன. ஆனால் அப்படி எல்லாம் விஜய் மல்லையா எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் சூழ்நிலையே இல்லை என மறுக்கின்றன இங்கிலாந்து தகவல்கள்.
Recommended Video
இந்திய வங்கிகளிடம் இருந்து ரூ9,961 கோடி கடன் பெற்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் வங்கிகளை மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு ஓடிவிட்டார் விஜய் மல்லையா.

மும்பை சிறையில் அடைக்கப்படுவதாக தகவல்
இதனால் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி இங்கிலாந்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த மே 14-ந் தேதியன்று, விஜய் மல்லையாவை 28 நாட்களுக்குள் நாடு கடத்த வேண்டும் என்றும் இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான் விஜய்மல்லையா, இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டுவிட்டார். அவர் எந்த நேரமும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுவிடுவார்; இந்தியா வந்த உடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சிறைச்சாலையில் அடைக்கப்பட இருக்கிறார் என நேற்று இரவு முதல் செய்திகள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன.

உண்மை இல்லையாமே?
இந்த தகவல்களை பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் மிகப் பெரும் சாதனையை போல பதிவிட்டு விவாதித்தும் வருகின்றனர். ஆனால் இங்கிலாந்தில் இருந்து கிடைக்கும் தகவல்களோ, விஜய் மல்லையாவை எந்த நிமிடத்திலும் நாடு கடத்துவார்கள் என்கிற தகவலில் எந்த ஒரு உண்மையுமே இல்லை என்கின்றன. இந்திய தூதரக வட்டாரங்களும் சரி, மல்லையா தரப்பும் சரி, உடனடியாக நாடு கடத்துதலுக்கான சாத்தியங்களை திட்டவட்டமாகவே மறுத்து வருகின்றனர்.

உள்துறை செயலர் கையெழுத்திடவில்லை
இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை சிபிஐ, அமலாக்கப் பிரிவின் பழைய அறிக்கைகளை வைத்துக் கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன எனவும் கூறப்படுகிறது. விஜய் மல்லையாவை நாடு கடத்துதல் தொடர்பான கோப்பில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பாட்டீல் இன்னும் கையெழுத்திடவில்லையாம். இங்கிலாந்து நீதிமன்றங்களில் மல்லையாவுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனேகமாக அவர் அந்த நாட்டில் தஞ்சம் கோரி மனுத் தாக்கல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

அத்தனையுமே பொய்யா கோப்பால்?
இங்கிலாந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட, விஜய் மல்லையாவை நாடு கடத்தும் தேதி குறித்து இன்னமும் முடிவே செய்யப்படவில்லை. ஒருவேளை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டால் அவருடன் செல்லும் அதிகாரிகள் யார்? இந்திய அதிகாரிகளிடம் விஜய்மல்லையாவை ஒப்படைக்கும் அதிகாரிகள் யார் என்கிற விவரங்கள் தெரியவந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். ஆகையால் இதுவரை வெளியானவை பொய் செய்திகளே என்கின்றன இங்கிலாந்து தகவல்கள்.












Click it and Unblock the Notifications