வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்.. பல வருட காத்திருப்பு.. மத்திய அரசு எடுத்த சூப்பர் முடிவு
டெல்லி: தேசிய வங்கி ஊழியர்களைப் போல கிராம வங்கி ஊழியர்களுக்கும் இனி 1993 நவம்பர் முதல் தர வேண்டிய ஓய்வூதியம் கிடைக்கும். இதனால் 60 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள், 12 ஆயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் குறித்து பேசிய கிராம வங்கி ஊழியர் யூனியன்களின் ஐக்கிய மன்ற தேசிய ஒருங்கிணைப்பாளர் திரிவேதி இந்த தகவலை தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கான அடிப்படை ஓய்வூதியம் 100 ரூபாயில் இருந்து 163 ரூபாயாக கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. 2017-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதிக்கு முன் பணி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே இந்த அடிப்படை ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட்டது. அடிப்படை ஓய்வூதிய உயர்வு 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதிய நிலுவைத் தொகை செலுத்தப்படவில்லை.

முன்னதாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன் பெற்றார்கள். இதுதான் கடந்த சில வருடங்களில் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகள் ஆகும். இந்நிலையில் தேசிய வங்கி ஊழியர்களைப் போல கிராம வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க போகிறது. இது தொடர்பான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் தெரிவித்தது.
இது தொடர்பாக கிராம வங்கி ஊழியர் யூனியன்களின் ஐக்கிய மன்ற தேசிய ஒருங்கிணைப்பாளர் திரிவேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், " நமது நாட்டில் கிராம வங்கி 1975-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987 செப்டம்பர் முதல் வணிக (தேசிய) வங்கி ஊழியர்களுக்கு வழங்குவதைப்போன்ற ஊதியம் வழங்கப்படுகிறது. வணிக வங்கிகளுக்கு 1993-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் நீண்ட சட்டப்போராட்டத்துக்குப்பின் கடந்த 2018 ஏப்ரல் முதல்தான் கிராம வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஆனால் தேசிய வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல கிராம வங்கி ஊழியர்களுக்கும் 1993 நவம்பர் முதல் ஓய்வூதியம் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதில் கடந்த ஆகஸ்ட் 12-ந்தேதி மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் வணிக வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல கிராம வங்கி ஊழியர்களுக்கும் 1993-ம் ஆண்டு நவம்பர் முதல் ஓய்வூதியம் வழங்க ஒப்புக்கொண்டு உள்ளது. இதனால் 60 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள், 12 ஆயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன்பெறுவார்கள்" இவ்வாறு திரிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications