வக்பு திருத்த சட்டம்: இடைக்கால உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம்! புதிய நியமனம் செய்ய கூடாது என ஆணை
டெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்பு திருத்த சட்டப்படி எந்த ஒரு புதிய நியமனமும் செய்யக்கூடாது, நிலம் வகைப்படுத்துதல், ஏற்கனவே வக்பு இடம் என்று அறியப்பட்ட சொத்துக்களின் மீது எந்தவித நடவடிக்கையும் கூடாது என்று உத்தரவிட்டது. வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாக இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, வக்பு சட்டத்தை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து இது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது.

72 ரிட் மனுக்கள்
இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், தனி நபர்கள் சார்பிலும் என 72 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை தொடங்கியதும், 'இந்த ரிட் மனுக்களை விசாரிப்பதா? அல்லது மனுக்களை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி விசாரிக்க சொல்வதா? இந்த விவகாரத்தை வலியுறுத்தி முன்வைக்கப்பட உள்ள வாதங்கள் என்ன?' என இருதரப்பையும் கேட்டனர். இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடினார். அப்போது அவர், 'அரசியலமைப்பு சட்டத்தின் 26-வது பிரிவில் மதம் சார்ந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை அனைவருக்கும் பொதுவானது. மதச்சார்பற்றது. ஆனால், வக்பு சட்ட திருத்தம் வழிபாட்டு முறையை பறிக்கிறது" என வாதிட்டார்.
மத்திய அரசுக்கு கேள்வி
மற்றொரு மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் ஹுஸேபா அகமது ஆஜராகி 'அனுபவ வக்பு சொத்து என்பது முஸ்லிம் மதத்தில் நிலைபெற்ற வழக்கமாக இருப்பதால், அனுபவ சொத்துகளை கையகப்படுத்த அனுமதிக்க கூடாது' என வாதிட்டார். ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'நீதிபதிகள் இருக்கையில் அமரும் போது எங்களுக்கு மதம் எதுவும் இல்லை - நீதிபதிகளை மதத்துடன் சார்புடையவராக நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது' என்றனர்.
இந்த விசாரணையின் போது, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றமும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. முஸ்லிம்களின் வக்பு வாரியத்தில் இந்துக்கள் உறுப்பினராக முடியும் என்றால், இந்து அறநிலையத்துறையில் முஸ்லிம்கள் உறுப்பினராக முடியுமா? எதற்காக இப்படி ஒரு நடைமுறை என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
2வது நாளாக இன்று விசாரணை
மேலும் நீதிபதிகள், 'வக்பு அனுபவ சொத்துகள் அல்லது விற்பனை செய்யப்பட்டு நீதிமன்றங்களால் வக்பு சொத்துகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டவற்றை இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது வக்பு சொத்துகள் என வரையறுக்ககூடாது. வக்பு சொத்துகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளை செயல்படுத்தக்கூடாது.
வக்பு வாரியங்களிலும், மத்திய வக்பு கவுன்சிலிலும் அலுவல்வழி உறுப்பினர்கள் இருவரை தவிர அனைவரும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பன போன்ற இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க உத்தேசித்து உள்ளோம். இவை தொடர்பாக வாதங்களை இன்று பிற்பகல் 2 மணிக்கு முன் வைக்க வேண்டும் எனக் கோரி விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இடைக்கால உத்தரவு பிறப்பிப்பு
இதன்படி இன்று மதியம் இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உடனே மத்திய அரசு தரப்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என்று கோரப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டனர்.
மேலும், வக்பு திருத்த சட்டப்படி எந்த ஒரு புதிய நியமனமும் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டன. நிலம் வகைப்படுத்துதல், ஏற்கனவே வக்பு இடம் என்று அறியப்பட்ட சொத்துக்களின் மீதும் எந்தவித நடவடிக்கையும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications