கால்வன் பள்ளத்தாக்கு: சீனா ராணுவத்துக்கு எதிராக விடிய விடிய 20 மணிநேர யுத்தம்: இந்தோ- திபெத் படை
டெல்லி: லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை சீனா ஆக்கிரமிப்பதை எதிர்த்து விடிய விடிய சுமார் 20 மணிநேரம் யுத்தம் நடத்தியதாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
லடாக் கிழக்கு எல்லையின் கால்வன் பள்ளத்தாக்கை ஆக்கிரமிக்க சீனா முயன்றது. சீனாவின் இந்த முயற்சிக்கு நமது ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அதாவது ஜூன் 15-16ல் நடந்த இருதரப்பு மோதலில் நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சீனா 42 வீரர்களை இழந்தது. இதனை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இந்தியா- சீனா இடையே யுத்த பதற்றம் உருவானது. இதனை தவிர்க்கும் வகையில் தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் சீனா தரப்பு ஆக்கிரமிப்பு முயற்சியை கைவிடுவதாக இல்லை.
இதனிடையே எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை விளக்கம் அளித்திருக்கிறது. அதில், சீனாவுக்கு எதிராக 17 முதல் 20 மணிநேரம் வரை யுத்தம் நடத்தி இருக்கிறோம். விடிய விடிய சீனாவின் கல்லெறி தாக்குதல்களை எதிர்கொண்டு அதை தீரத்துடன் முறியடித்திருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவுடனான மோதலில் படுகாயமடைந்த வீரர்களை பின்களத்துக்கு- மருத்துவமனைக்கு கொண்டு வருவதிலும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிரமாக பணியாற்றினர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவுடனான மோதலை முறியடித்த 249 இந்தோ திபெத் எல்லை படையினருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications