வீட்டிற்கு செல்ல மாட்டோம்...அக்டோபர் 2 வரை தான்...அரசுக்கு கெடு வைத்த விவசாய சங்கங்கள்
டெல்லி : வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அக்டோபர் 2 வரை தான் மத்திய அரசுக்கு அவகாசம் என பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 75 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் ஒற்றுமையை காட்டவும், போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கவும் இன்று நாளு தழுவிய 3 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
போராட்டத்தின் போது டெல்லி-உத்திரபிரதேச எல்லையான காசிபூரில் போராட்டக்காரர்கள் இடையே ராகேஷ் திகைத் பேசினார். அப்போது அவர், நமத கோரிக்கைகள் நிறைவேறும் வரை யாரும் வீட்டிற்கு திரும்பக் கூடாது. பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்கவும் யாரும் மத்திய அரசிற்கு அழுத்தம் தர வேண்டாம்.
இந்த போராட்டம் அக்டோபர் 2 வரை நீடிக்கும். அது வரை தான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசுக்கு அவகாசம். அப்படியம் திரும்பப் பெறாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விவசாய சங்கங்கள் திட்டமிடுவோம். பேச்சுவார்த்தை விவகாரத்தில் நாங்கள் அரசுக்கு அழுத்தம் தர மாட்டோம் என்றார்.
காந்தி ஜெயந்தி வரை டைம் தரோம்.. அதுக்குள்ள விவசாய சட்டங்களை ரத்து பண்ணுங்க.. விவசாய சங்கம் அறிவிப்பு
இன்று சாலை மறியல் போராட்டத்தை துவங்குவதற்கு முன், போலீசார் தடுப்புக்கள் அமைத்துள்ள இடத்திற்கு அருகே ராகேஷ், மலர் செடிகளை நட்டார். அவர்கள் நகங்களை வைத்தால் நாங்கள் மலர்களை வளர்ப்போம் என்றார். விவசாயிகள் - மத்திய அரசு இடையேயான இந்த உறவு நீண்ட காலம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் அறிவித்தது போலவே உ.பி., உத்திரகாண்ட். டெல்லி தவிர்த்து பஞ்சாப்பின் 15 மாவட்டங்களில் 33 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிக அளவிலான டிராக்டர்கள் சாலைகளை ஆக்ரமித்து நின்றன.