பணிவாக ஏற்கிறேன்.. தோல்வியிலிருந்து பாடம் கற்று மக்களுக்காக உழைப்போம்: ராகுல் காந்தி
டெல்லி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்களின் முடிவை ஏற்பதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக 175 இடங்களில் முன்னிலையும் 70 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. உத்தராகண்டில் 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக 8 இடங்களில் வென்றுள்ளது, மணிப்பூரில் 17 இடங்களில் பாஜக முன்னிலையும் 14 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.

கோவாவில் 6 இடங்களில் பாஜக முன்னிலையும் 14 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி 32 இடங்களிலும் முன்னிலையும் 60 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பஞ்சாபில் ஆட்சியை பறிகொடுத்துள்ள காங்கிரஸ் உத்தரப்பிரதேசம், கோவாவில் ஒற்றை இலக்க எண்களில் முன்னிலை வகித்து வருகிறது. உத்தராகண்டிலும் அக்கட்சி பாஜகவை விட பின் தங்கிய நிலையில் உள்ளது.
காங்கிரஸ் தோல்விக்கு அதன் வியூகங்களும் உள்கட்சிப்பூசல்களுமே காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் முடிவுகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "மக்களின் தீர்ப்பை பணிவோடு ஏற்று கொள்கிறேன். வெற்றி அடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த முடிவுகளில் இருந்து பாடம் கற்று கொண்டு மக்களின் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு முன்னதாக கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் யுத்தம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. துணிச்சலோடும் திறமையோடும் தொடர்ந்து பயணிப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications