குற்றப்பத்திரிகை ரொம்ப ‛வீக்’.. பிரிஜ் பூஷணை காப்பாற்றும் டெல்லி போலீஸ்? போராட்டக்காரர்கள் பகீர்
டெல்லி: பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை காப்பாற்றும் நோக்கத்தில் மத்திய அரசின் அழுத்தத்தால் மிகவும் பலவீனமான குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் என அவருக்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதால் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் பாஜக எம்பியாக உள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் அங்கு மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை.

இதனால் தொடர்ந்து டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவின்போது பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஜூன் 15 ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி போலீசார் தாக்கல் செய்தனர்.
அதில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பதியப்பட்ட போக்சோ வழக்கில் ஆதராமில்லை. இதனால் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மைனர் மல்யுத்த வீராங்கனையின் குற்றச்சாட்டில் உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும் மல்யுத்த வீரர்கள் பதிவு செய்த எப்ஐஆரில் விசாரணை முடிந்ததும், பிரிவுகள் 354 (பெண்ணைத் தாக்குதல்), 354A (பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை), 354D (பின்தொடர்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம்'' என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தான் குற்றப்பத்திரிகைக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கோபமடைந்துள்ளனர். இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத ஒரு போராட்டக்காரர் கூறுகையில், ‛‛பிரிஜ் பூஷண் சரண் சிங்கை காப்பாற்றும் நோக்கத்தில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்ட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை மிகவும் பலவீனமாக உள்ளது. மத்திய அரசின் அழுத்தத்தின் கீழ் டெல்லி போலீசார் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மிகவும் ஸ்ட்ராங்கான வழக்கு என்பது மைனர் மல்யுத்த வீராங்கனைக்கான துன்புறுத்தல் தான்.
ஆனால் அந்த போக்சோ வழக்கில் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பதியப்பட்ட வழக்கில் ஆதாரங்கள் இல்லை எனவும், அதனை ரத்து செய்யவும் 552 பக்கத்தில் அதற்கான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையை முழுவதுமாக எங்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆராய்வார்கள். அதன்பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் பற்றிய முடிவு செய்யப்படும்'' என்றார். இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் இதோடு முடியுமா? இல்லாவிட்டால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications