ஜெய் பங்களா vs ஜெய் ஸ்ரீராம்! மேற்கு வங்கத்தில் எதிரொலித்த அரசியல் முழக்கம்! பாஜக-திரிணாமுல் மோதல்
டெல்லி: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிணாமுல்-பாஜக தொண்டர்களிடையே மோதல் வெடித்திருக்கிறது.
குறிப்பாக பனிஹதி தொகுதிக்குட்பட்ட அகர்பாரா பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாஜக வேட்பாளரான ரத்னா தேப்நாத், அகர்பாராவில் உள்ள 165-வது வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு நிலவரங்களை ஆய்வு செய்யச் சென்றார்.

ரத்னா தேப்நாத்தின் வாகனம் அந்தப் பகுதிக்கு வந்தவுடனேயே, பதற்றம் தொற்றிக்கொண்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அவரது காரைச் சூழ்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேட்பாளருக்கு எதிராக "Go Back" மற்றும் "Joy Bangla" ஆகிய முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தன்னை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் இடையூறு விளைவித்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று ரத்னா தேப்நாத் தேர்தல் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
யார் இந்த ரத்னா தேப்நாத்?
கொல்கத்தா அரசு ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த 31 வயது பெண் மருத்துவர் அபயா, கடந்த 2024ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட அபயாவின் தாய்தான் இந்த ரத்னா தேப்நாத்.
தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் ரத்னா தேப்நாத் தீவிர அரசியலில் இறங்கியுள்ளதாகவும், மக்கள் என் பக்கம் இருப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இவர், பனிஹதி தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications