மேற்கு வங்கம்: பெரிய சிக்கலில் காங்.,! யார் ஜெயித்தாலும் கட்சி காலியாகிவிடும்! ராகுல் காந்தி கலக்கம்
டெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஒருவேளை திரிணாமுல் காங்கிரஸோ அல்லது பாஜகவோ வெற்றி பெற்றால், அது காங்கிரஸுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், இன்று முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2ம் கட்டமாக ஏப்.29ல் தேர்தல் நடைபெறும்.

இந்நிலையில், இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி ஜெயிக்கிறார் எனில், அவர் 2029 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் (INDIA Bloc) பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு அதிகம். இது ராகுல் காந்தியின் தலைமையை பலவீனப்படுத்தும். மறுபுறம் பாஜக ஜெயிக்கிறது எனில், அது தேசிய அளவில் பாஜகவின் பலத்தை இன்னும் அதிகரிக்கும். 2029 தேர்தலுக்கு அவர்களுக்குப் பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும்.
மம்தாவின் எழுச்சி
1998-இல் காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸைத் தொடங்கிய மம்தா, 2011-இல் 34 கால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இவர் 2021-இல் பாஜகவின் கடுமையான சவாலையும் மீறி மூன்றாவது முறையாக வென்றார். இப்போது நான்காவது முறையாக வென்று, தன்னை ஒரு தேசியத் தலைவராக நிலைநிறுத்தப் போராடுகிறார்.
பாஜகவின் வளர்ச்சி
மம்தா மட்டுமல்ல, இந்த காலத்தில் பாஜகவும் செல்வ செழிப்பாக வளர்ந்திருக்கிறது. கடந்த 2016-இல் வெறும் 3 இடங்களை மட்டுமே வைத்திருந்த பாஜக, 2021-இல் 77 இடங்களை வென்று மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த மண் என்பதால், மேற்கு வங்கத்தை வெல்வது அக்கட்சிக்கு ஒரு சித்தாந்த ரீதியான வெற்றியாகவும் அமையும். இந்த மாநிலத்தின் வெற்றியை பாஜக கவுரவ பிரச்சனையாகவும் பார்க்கிறது.
கோட்டை விட்ட காங்கிரஸ்
மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, 1977-க்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவில்லை. மம்தா பானர்ஜியின் தீவிர விமர்சகரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மாற்றப்பட்டது, காங்கிரஸ் மம்தாவிடம் சரணடைந்துவிட்டதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தேசிய அளவில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், அடுத்தடுத்த மாநிலத் தேர்தல் தோல்விகள் அவரது தலைமை குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளன.
இந்தியா கூட்டணியை பொறுத்தவரை, சரத் பவார், லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்கள் மம்தா பானர்ஜியை கூட்டணியின் தலைவராக ஏற்கத் தயார் என்று குறிப்பிட்டாலும், காங்கிரஸ் அதைத் தள்ளிப்போட்டு வருகிறது. ஆனால், மணிசங்கர் அய்யர் போன்ற காங்கிரஸ் தலைவர்களே மம்தாவை கூட்டணியின் தலைவர் என்று வெளிப்படையாக ஆதரிப்பது ராகுல் காந்திக்கு ஒரு சிக்கலாக மாறியுள்ளது. இந்த பின்னணியில் மேற்கு வங்கத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications