மேற்கு வங்கத்தில் பதற்றம்.. வாக்குப்பதிவுக்கு நடுவே வெடித்த மோதல்! போலீஸ் தடியடி!
டெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஹுமாயூன் கபீர் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் காரணமாக பதற்றம் நிலவி உருவாகியிருக்கிறது.
நேற்றிரவு முதல் இரு தரப்பினர் சண்டையிட்டு வருகின்றனர். நேற்று முர்ஷிதாபாத்தில் சிவநகர் ஆரம்பப் பள்ளி அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து இன்றும் இரு தரப்பினர் கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டு வீச்சால் பாதிக்கப்பட்ட நபர், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் ஹுமாயூன் கபீர் (AUJP நிறுவனர்) கட்சியினர் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மோதல் காரணமாக முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். மோதல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹுமாயூன் கபீர், தேர்தல் அமைதியாக நடப்பதாக தெரிவித்துள்ளார்.
கலவரக்காரர்கள், டொம்கல் மற்றும் ராய்பூர் கிராமங்களில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆயுதம் ஏந்திய நபர்களின் நடமாட்டம் காரணமாக மக்கள் அச்சமடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் கூடுதல் பாதுகாப்பை வழங்கி, மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்றது.
கலவரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பெல்தங்கா, கண்டி, சம்ஷேர்கஞ்ச் ஆகிய இடங்களிலும், நந்திகிராம், மால்டா, கூச் பெஹார் போன்ற மற்ற மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதமானது. இது குறித்து தேர்தல் ஆணையப் பிரதிநிதிகள் சரியான விளக்கம் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் அதிகாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக இன்று 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications