அஞ்சி நடுக்குபவர்களுக்குத்தான் மரணம்.. என் கதையை உங்களால் முடிக்க முடியாது.. மோடிக்கு மம்தா சவால்!
டெல்லி: அஞ்சி நடுக்குபவர்களுக்குத்தான் மரணம்.. நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம்.. என் கதையை உங்களால் முடிக்க முடியாது என்று பிரதமர் மோடியை விமர்சித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளார்.
மேற்கு வங்க அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் தீவிரமாகிக்கொண்டே வருகிறது. யாஸ் புயல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாத விஷயம் சர்ச்சையான நிலையில், கோபம் கொண்ட மத்திய அரசு மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாயை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது.
ஆலன் பந்தோபத்யாவிற்கு 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று டெல்லிக்கு ஆலன் பந்தோபத்யா திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு செக் வைத்தது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி, ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு அனுப்ப முடியாது உறுதியாக இருந்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினார்.

ஓய்வு
ஆனால் ஆலன் பந்தோபத்யாவை டெல்லிக்கு வரவைப்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதையடுத்து புது திருப்பமாக ஆலன் பந்தோபத்யா நேற்று ஓய்வு பெற்றார். மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற ஆலன் பந்தோபத்யா மம்தா பானர்ஜியின் தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எப்படியாவது இவரை டெல்லிக்கு மாற்றி, மம்தாவை அவமதிக்காமல் என்று நினைத்த மத்திய அரசுக்கும் மம்தா பதிலடி கொடுத்தார்.

திருப்பம்
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நேற்று மம்தா பானர்ஜி பேசியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல பாலிவுட் படமான ஷோலேவில் இருந்து முக்கியமான வசனம் ஒன்றை அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார். அதில், அச்சம் அடைபவர்கள் மரணிப்பது உறுதி..அச்சப்படுபவர்களுக்குதான் மரணம் ஏற்படும். நாங்கள் யாருக்கும் அஞ்ச கூடியவர்கள் கிடையாது. மத்திய அரசை பார்த்து எங்களுக்கு அச்சம் இல்லை.

பேச்சு
மாநில அரசுகளை தவறாக நடத்துவதற்கும், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதற்கும் மத்திய அரசு ஒருநாள் கண்டிப்பாக வருத்தப்படும். உங்களின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். வங்கம் என்று தோற்றது இல்லை. நாங்கள் எப்போது எங்கள் தலையை நிமிர்த்தி நடப்போம்.

அச்சம்
மத்திய அரசு கொரோனா தடுப்பு என்று பல விஷயங்களில் தோல்வி அடைந்துவிட்டது. இதை மறைக்க வேண்டும் என்பதற்காக கவனத்தை திசை திருப்புகிறது. மாநில அரசுகளை சீண்டி மத்திய அரசு கவனத்தை திசை திருப்புகிறது. நீதியை வழங்குவதற்கு பதிலாக நீதியை மத்திய அரசு சாகடிக்கிறது.

போராட்டம்
எங்களின் போராட்டத்தை உங்களால் தடுக்க முடியாது. அரசு அதிகாரிகளை குறி வைப்பதன் மூலம் நீங்கள் நீதியை மேலும் குலைக்கிறீர்கள். மிஸ்டர் பிரதமரே.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. என்னுடைய கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது.. என்னுடைய கதையை உங்களால் ஒரு போதிலும் முடிக்க முடியாது. எனக்கு பயம் இல்லை. எங்களுக்கு பயம் இல்லை.

செய்து பாருங்கள்
முடிந்தால் செய்து பாருங்கள். எல்லா மாநில அரசுகளிடமும் நான் பேசுவேன், எல்லா அதிகாரிகளிடம், எல்லா அறிஞர்கள், அரசியல் வல்லுநர்கள், என்ஜிஓக்கள் என்று, எல்லோரிடமும் பேசி அவர்களை என் பின்னே அணி திரள வைப்பேன். உங்களுக்கு எதிராக நாங்கள் ஒன்று கூடும் நேரம் இது, எங்களின் போராட்டம் தொடரும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications