"யாரும் எதிர்பார்க்கல.." இந்திய பொருளாதாரம்.. பிரச்சினை இந்த மேட்டரால் வருமாம்.. ரிசர்வ் வங்கி பரபர
டெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016இல் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டு வரப்பட்ட போது, ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருந்த சுமார் 85% நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. இருப்பினும், அப்போதே சில்லறை கிடைப்பதில்லை என்று மக்கள் முணுமுணுத்தனர். மேலும், பல்வேறு காரணங்களால் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது, ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைப்பது நிறுத்தப்பட்டது.
2000 ரூபாய் நோட்டுகள்: அப்போதே 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற உள்ளதாகத் தகவல் பரவியது. நாடாளுமன்றத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அப்போது மத்திய அரசு அதைத் திட்டவட்டமாக மறுத்திருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. செப். 30க்குள் 2000 ரூபாய் நோட்டுகளைத் மாற்றிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அதுவரை 2000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற போதிலும் அதை மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நமது இந்திய பொருளாதாரத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது 2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் பொருளாதாரத்தில் எந்த நெகடிவ் தாக்கமும் ஏற்படாது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு ஏற்படுமா: அவர் மேலும் கூறுகையில், "2000 ரூபாய் நோட்டுகளை நாம் திரும்பப் பெறுகிறோம். இருப்பினும், இதனால் எந்தவொரு நேர்மறையான பாதிப்பும் நமது பொருளாதாரத்தில் ஏற்படாது. இதை என்னால் மிகவும் உறுதியாகவே சொல்ல முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
புழக்கத்தில் இருந்த மூன்றில் இரண்டு பங்கு 2000 ரூபாய் நோட்டுகள் ஏற்கனவே வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் இந்த கருத்து முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 30க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை அனைவரும் மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்த பேட்டியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பணவீக்கம் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். பணவீக்கம் குறைந்து வருவதாகத் தெரிவித்த அவர், அதேநேரம் அதில் பல சவால்கள் இருப்பதாக எச்சரித்தார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே இப்போது பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பிரச்சினை எதனால் வரலாம்: இருப்பினும், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் எல் நினோவால் பாதிப்பு ஏற்படலாம் என வந்த முன்னெச்சரிக்கை ஆகியவை காரணமாக சில சவால்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவை இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், இதனை ரிசர்வ் வங்கி தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications