பிரதமர் மோடி மீண்டும் வெல்ல.. அந்த 2 மேட்டர் முக்கிய காரணமாக இருக்கும்! பரபர சர்வே முடிவுகள்
டெல்லி: நமது நாட்டில் இன்னும் ஒரே வாரத்தில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இது தொடர்பாக புதிய சர்வே முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் உள்ள பல விஷயங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து 3ஆவது முறையாக வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு சர்வே முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதற்கிடையே சிஎஸ்டிஎஸ் எடுத்த சர்வே முடிவுகளில் நமது நாட்டில் இப்போது வாக்காளர்களின் முக்கிய பிரச்சினை என்ன, பிரதமர் மோடியின் இமேஜ் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் உள்ளன.
மோடி: இந்த சர்வேபடி வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை தான் இந்திய வாக்காளர்களின் முக்கிய கவலைகளாக உள்ளன. அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமை மற்றும் இந்தியாவின் உயர்ந்து வரும் சர்வதேச அந்தஸ்து அவர் மீண்டும் வெல்ல உதவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஜிடிபி வளர்ந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் நமது நாட்டில் இருக்கும் 140 கோடி மக்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் 28 மாநிலங்களில் 19 மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் ஆய்வில் சுமார் 27% பேர் வேலையின்மை முதன்மையான பிரச்சினையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல விலைவாசி உயர்வு 23% பேர் பிரச்சினையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை தேடுவது மிகவும் கடினமாகிவிட்டதாக மூன்றில் இரண்டு பங்கு அதாவது 62% பேர் கூறியுள்ளனர்.
முதல் மேட்டர்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது தான் பிரதமர் மோடி செய்ததிலேயே நல்ல விஷயம் என்று 22% பேர் கூறியிருக்கிறார்கள். அதேநேரம் 8% பேர் மட்டுமே இது முக்கியமான விஷயம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் அதன் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருந்தாலும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் நமது நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்று மக்கள் கருதுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் வேலையின்மை விகிதம் 2013/14இல் 4.9% ஆக இருந்த நிலையில், அது 2022/23 இல் 5.4% ஆக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக 29 வயதுக்குட்பட்ட நகர்ப்புற இளைஞர்களில் சுமார் 16% பேர் 2022/23இல் வேலையில்லாமல் இருந்தனர். மோசமான திறன்கள் மற்றும் தரமான வேலைகள் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ராமர் கோயில்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. குறைந்தது 48% பேர் ராமர் கோயில் ஒரு இந்து அடையாளத்தை உறுதிப்படுத்தும் என்று கூறியுள்ளனர், ஆனால் பெரும்பான்மையானவர்கள் (79%) இந்தியா இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் சமமாகச் சொந்தமானது என்று கூறியுள்ளனர்.
இரண்டாவது மேட்டர் இதுதான்: இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் சுமார் 8% பேர், சர்வதேச அரங்கில் இந்தியாவின் இமேஜை உயர்த்துவதில் மோடி அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளனர். இந்த இரண்டு விஷயங்கள் பிரதமர் மோடிக்குத் தேர்தலில் மிகப் பெரியளவில் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications