பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான 6 முக்கிய விஷயங்கள்! நிர்மலா சீதாராமன் உரையில் இதை நோட் பண்ணீங்களா
டெல்லி: மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் சாமானியர்களுக்காக அறிவிக்கப்பட்ட 6 முக்கிய விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 6ஆவது முறையாகும்.

இந்த பட்ஜெட்டும் முழுக்க முழுக்க டிஜிட்டல் பட்ஜெட்டாகவே இருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.
நிர்மலா சீதாராமன்: அப்போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014க்கு முன்பு நாடு பல்வேறு சவால்களைச் சந்தித்ததாகத் தெரிவித்த அவர், நாடு பெரும் சவால்களைச் சந்தித்த நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 2014இல் பொறுப்பேற்றது என்று கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
6 முக்கிய விஷயங்கள்: மேலும், இந்த இடைக்கால பட்ஜெட்டில் அவர் சில முக்கிய விஷயங்கள் குறித்தும் அறிவித்தார். அதன்படி இந்த இடைக்கால பட்ஜெட்டில் சாமானியர்களுக்காக அறிவிக்கப்பட்ட 6 முக்கிய விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
நடுத்தர வர்க்கத்தினரை தங்களுக்கென சொந்த வீடுகளை வாங்க அல்லது கட்டுவதை ஊக்குவிக்க நடுத்தர வகுப்பினருக்கான வீட்டுவசதி திட்டத்தை அரசு பின்பற்றி வருகிறது. இந்த திட்டம் தொடரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமீன்) அதன் இலக்கான 3 கோடி வீடுகளை நெருங்கி வருகிறது, இத்திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் 2 கோடி வீடுகளை வழங்க கூடுதலாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்பது நாட்டின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ளவர்களுக்கு மலிவு விலையில் வீடுகளை அணுக உதவும் திட்டமாகும். இதன் கீழ் பெறப்பட்டும் கடனுக்கு மானியம் வழங்கப்படும்.
குழந்தை பராமரிப்பு: சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டங்களை விரைவுபடுத்தி, அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்... ஊட்டச்சத்து விநியோகம், குழந்தை பராமரிப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இப்போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அதிகரிக்கும் நிலையில், அதை தடுக்கவும் புதிய திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி 9-14 வயதுடைய பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசியை ஊக்குவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத்: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆஷா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை உள்ளடக்கிய சுகாதார பாதுகாப்பு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
அனைத்தையும் விட முக்கியமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டத்தில் முக்கியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது 1 கோடி வீடுகளுக்குச் சூரிய ஒளித்திட்டத்தின் கீழ் பேனல்கள் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications