பாஜகவின் மனமாற்றம்.. அரசியலில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக மாறிய விஷயங்கள் என்னென்ன?
டெல்லி: பாஜக மேலிடம் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைமையாக ஏற்றுக்கொண்டதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் வெளிப்பாடு தான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய வாழ்த்து என்று சொல்கிறார்கள். அதேபோல் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பையும் பார்க்க வேண்டி உள்ளது என மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
அதிமுகவில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு தலைமை பொறுப்புக்காக மோதல் ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் மறைந்த பின்னர் அன்று நடந்த போட்டியில் ஜெயலலிதா வென்றார். ஜானகி தனது அணியை ஜெயலலிதாவிடம் இணைத்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் மீண்டும் அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமி வெற்றியும் பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் ஆதரிப்பதால் அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு சாதமாக தீர்ப்புகள் இதுவரை வரவில்லை.

வலுவான கூட்டணி
இது ஒருபுறம் எனில் அதிமுக தலைமையை கைப்பற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமியை முழுமையாக நம்பும் பாஜக, அவருக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் விரைவில் வலுவான தலைமை உருவானால் தான் , 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு உதவும் என்ற பாஜக நினைக்கிறதாம். திமுகவை வீழ்த்த அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என பாஜக மேலிடம் நினைப்பதால் தலைகீழ் மாற்றங்கள் அரங்கேறுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

என்னென்ன விஷயங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2017ல் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே, அவருக்கு சாதகமாக மாறிய விஷயங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர்செல்வமும் இணைந்தாலும், மனரீதியாக இருவரும் தனித்தனியாக அணியாகவே இருந்தார்கள். அந்த சமயத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனது செல்வாக்கை நிலைநாட்டினார். கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியே இருந்தது. கொங்கு மண்டலத்தில் தான் அதிமுக அதிக இடங்களில் வென்று இருந்ததும், வேலுமணி, தங்கமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்ததால், கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி வலுவான தலைவராக உருமாறினார்.

இடஒதுக்கீடு
அதன் பின்னர் தமிழகம் முழுவதுமே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினார்கள். அதேநேரம் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓபிஆர் ஆகியோரின் தீவிர பாஜக ஆதரவு நிலையை ரசிக்காத அதிமுகவினர் பலர், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறிவிட்டார்களாம். இதை தனக்கு சாதமாக பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு வட்டத்தை பலமாக்கினார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனிடையே அரசியல் நிபுணர்கள் கூறும் போது, 2021ல் சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு கடைசி நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மண்டலத்திலும், வடக்கு மண்டலத்திலும் நன்றாகவே கைகொடுத்தது. ஆனால் தென்மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் டிடிவி எதிர்ப்பு மறுபக்கம் 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் ஓ பன்னீர்செல்வத்தினை பெரிய அளவில் பாதித்து.

எம்எல்ஏ சீட்
அதேநேரம் சட்டசபை தேர்தலின் போது பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமிக்கு கைகொடுத்தது. ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களை மெல்ல மெல்ல இழந்த நிலையில், அவரது ஆதரவாளர்களைவிட, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கே எம்எலஏ சீட் கிடைத்தது. முதல்வர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட பின்னர்,பம்பரமாக மாறிய எடப்பாடி, எல்லா தொகுதியிலும் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.

என்ன சிக்கல்
ஆனால் அப்போது ஓ பன்னீர்செல்வம் தனது தொகுதியிலேயே கடும் போட்டியை சந்தித்தால், தொகுதியை விட்டு வெளியே செல்லவே முடியவில்லை. மிக குறைந்த அளவிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதியாக தென்மாவட்டங்களில் அதிமுக பெரிய அளவில் பெறவில்லை. மாறாக கொங்கு மண்டலத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக அதிமுக உருவெடுத்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று கூறி அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமி தான் எதிர்க்கட்சி தலைவராக வேண்டும் என்றார்கள். அவரும் எதிர்க்கட்சி தலைவரானார்.

ஒபிஎஸ்க்கு கோரிக்கை
இறுதியாக இரட்டை தலைமை இருந்தால் அது அதிமுகவை அழித்துவிடும் என்று நினைத்த அதிமுக தலைவர்கள் பலர், ஓ பன்னீர்செல்வத்தை ஒதுங்கி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர் மறுத்ததால், கடைசியில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார்கள். அதிமுகவினை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவே கூறப்படுகிறது.

அரசியல் சதுரங்கவேட்டை
சட்டப்போராட்டத்திலும் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால், முழுமையாக எடப்பாடி பழனிசாமியை அதிமுக தலைவராக பாஜக மேலிடம் அங்கீகரித்துள்ளதாகவே அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.அமித்ஷாவே அதிமுகவுடன் கூட்டணி என்பதை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியும் விட்டார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசியல் சதுரங்க வேட்டையில் சசிகலா, டிடிவி தினகரன், கடைசியாக ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை மீறி எடப்பாடி பழனிசாமி வருவதற்கு காரணம், தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை கூட தவறவிடாதது தான் காரணம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications