"அதிகம் பேச மாட்டார்.. 2 நாள் முன்னாடி கூட.!" டெல்லி கார் வெடிப்பு.. உமரின் குடும்பத்தினர் பகீர்
டெல்லி: செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு நாடு முழுக்க பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் உமர் என்ற நபரின் குடும்பத்தினர் ஒன்இந்தியா தளத்திற்குச் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். தங்களுக்கு உமர் இதுபோன்ற சதிச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதே தெரியாது என்றும் இது அதிர்ச்சி தருவதாகவே உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லியில் மிக மோசமான ஒரு கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததே இல்லை. இந்தச் சம்பவம் குறித்து இப்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

உமர்
முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்தை உமர் என்ற நபர் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவரான அவரே காரை ஓட்டிச் சென்றதாகவும் செங்கோட்டை அருகே சிக்னலில் சென்றபோது கார் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சந்தேகிக்கப்படும் உமரின் குடும்பத்தினர் இது தொடர்பாக ஒன்இந்தியா தளத்திற்குச் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
குடும்பத்தினர் ஷாக்
இது குறித்து உமரின் குடும்பத்தினர் கூறுகையில், "உமர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கடைசியாக வீட்டிற்கு வந்தார். அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வந்தார். இது (டெல்லி கார் வெடிப்பு) குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. உமர் எப்போதும் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை போன் செய்து பேசுவார்.
வீட்டிற்கு வருவதாக சொன்னார்
வழக்கம் போலவே பேசினேன்.. வீட்டில் சில பிரச்சனைகள் இருக்கிறது.. வீட்டிற்கு வா.. உட்காது பேசுவோம் என்றேன்.. என்ன நடந்தாலும் ஓகே.. வீட்டிற்கு வந்து பேசினால் தான் பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும். அப்போது தான் நாங்களும் நிம்மதியாக இருக்க முடியும் என்றேன். அப்போது வீட்டிற்கு வருவதாகவே உமர் சொன்னார். மூன்று நாட்களில் வீட்டிற்கு வருவான் என உமர் சொன்னார்.
இன்னொரு முறை கால் செய்தபோது, தனக்கு தேர்வு இருப்பதாகவும் அதற்குத் தயாராக வேண்டும் என்பதால் நூலகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கும் தேர்வு உள்ளதாகக் கூறினார். அதன் பிறகு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது" என்றார்.
தெரியாது
மேலும், உமர் ஃபரிதாபாத்தில் வசித்து வந்ததாகவும், கடந்த 2, 3 ஆண்டுகளாக அங்குத் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். தனக்கு இது மட்டுமே தெரியும் என்றும் உமரை பற்றி வேறு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும், "அவர் எங்கே வேலை செய்தார் என்று எங்களுக்குத் தெரியாது.. அவர் ஒரு பேராசிரியராகப் பணிபுரிந்தார் என்பது மட்டுமே தெரியும்.
நேற்று போலீசார் வந்தனர். கொஞ்சம் விசாரிக்க வேண்டும் என மட்டும் சொல்லி அனைவரையும் அழைத்துச் சென்றனர். வேறு எதுவும் போலீசார் சொல்லவில்லை. நேற்றைத் தினம் எஸ்பி நேரில் வந்தார். அப்போது அவர் சொன்னபோது தான் இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
அதிர்ச்சி
உமரிடம் கார் இருந்ததா என்ற கேள்விக்கு அவர், "எங்கள் வீட்டில் ஒரு சாதாரணப் பழைய கார் மட்டுமே இருக்கிறது. நீங்களே அந்தப் பழைய காரை பார்க்கலாம்.. உமர் கார் வைத்திருந்தாரா என்று தெரியவில்லை. உமர் பொதுவாகவே யாரிடமும் அதிகம் பேச மாட்டார். இப்போது என்று இல்லை. எப்போதும் அவர் அப்படி தான் இருப்பார். அதுதான் அவரது இயல்பு. அவர் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். அவர் தொழுகையிலும் குர்ஆனிலும் அதிக ஆர்வம் காட்டினார். அவ்வளவு தான்! அவர் இதுபோன்ற ஒரு செயலைச் செய்திருப்பார் என்பதை எங்களால் கற்பனை கூட செய்யவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications