"உங்களுக்கு 2 நாள் டைம்!" போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்! கெடு விதித்த விவசாய சங்க தலைவர்கள்
டெல்லி: மத்திய அமைச்சர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக விவசாயிகள் சங்கங்கள் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளன
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த சில நாட்களாகவே தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் போலீசாரும் ஈடுபட்டதால் அங்கே பரபரப்பு நிலவியது.

குறைந்தபட்ச ஆதரவு விலை, 2020 மின்சாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.. அப்போது டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை: விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு சுமுக முடிவும் எட்டப்படவில்லை. அதேநேரம் நேற்று நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே சுமுக முடிவு எட்டப்பட்டதாகவும் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
விவசாயிகள்: இதற்கிடையே நள்ளிரவு வரை நடந்த நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பந்தேர் செய்தியாளர்களிடம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மீண்டும் 'டெல்லி சலோ' ஆர்ப்பாட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த மத்திய அரசின் முன்மொழிவு குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அரசின் முன்மொழிவு குறித்து அடுத்த இரண்டு நாட்களில் ஆலோசித்து முடிவு எடுப்போம். மற்ற கோரிக்கைகள் குறித்தும் அரசு ஆலோசிக்கும்.. நல்ல முடிவு வரவில்லை என்றால் பிப்ரவரி 21ஆம் தேதி முதல் டெல்லி சலோ போராட்டத்தை மீண்டும் தொடருவோம். அரசும், விவசாயச் சங்கங்களும் இணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலும்.
போராட்டம் தொடரும்: குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து அரசு அளித்துள்ள முன்மொழிவு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளைக்குள் ஆலோசித்து முடிவு எடுப்போம். மற்ற கோரிக்கைகள் குறித்து டெல்லியில் ஆலோசித்து நல்ல முடிவைச் சொல்வதாக அமைச்சர்கள் சொன்னார்கள். என்ன முடிவு வருகிறது என்பதைப் பொறுத்து பிப்ரவரி 21ஆம் தேதி 'டெல்லி சலோ' போராட்டத்தின் முடிவு இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் மத்திய அரசு எங்களுக்கு ஒரு திட்டத்தின் முன்மொழிவை வழங்கியுள்ளது. அதன்படி இந்த விவகாரத்தை இரண்டு அரசு நிறுவனங்கள் மேற்பார்வையிடும். இது குறித்து வல்லுநர்கள் உடன் விவாதித்து பின்னர் நாங்கள் ஒரு முடிவுக்கு வருவோம்..
கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்... எங்களின் மற்ற கோரிக்கைகள் குறித்தும் அவர்கள் முடிவெடுக்க வேண்டும். நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்தோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications