'இந்தியாவுக்குள் நுழைந்த ஓமிக்ரான்.. யாரும் பீதியடையத் தேவையில்லை, ஆனால்..' மத்திய அரசு கூறுவது என்ன
டெல்லி: கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்து மத்திய அரசு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரியளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகளே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் இம்முறை பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கின.

ஓமிக்ரான் கொரோனா
ஜப்பான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டினருக்கு தங்கள் எல்லைகளை மூடுவதாக அறிவித்துவிட்டன. அதேபோல அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மற்ற பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இருந்தாலும் கூட, ஓமிக்ரான் வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. அமெரிக்காவில் முதல் ஓமிக்ரான் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் ஓமிக்ரான்
இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இரண்டு பேருக்கு இந்த புதிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

லேசான பாதிப்பு தான்
அந்த இருவரில் ஒருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும் அறிகுறிகளும் கூட தீவிரமாக இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அச்சம் வேண்டாம்
நாட்டில் தற்போது ஓமிக்ரான் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்ல எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைவரும் பொறுப்புடன் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஓமிக்ரான் உருமாறிய கொரோனா இதுவரை நாம் கண்டறிந்த கொரோனா வகைகளைக் காட்டிலும் 5 மடங்கு வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். இதுவரை 29 நாடுகளில் 373 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு
இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளில் சில மாற்றங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த ஓமிக்ரான் உருமாறிய கொரோனாவில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா குறித்துக் கண்டறிய சில வாரங்களாவது ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டிலயிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications