"உரிய அனுமதி இல்லை.. கையிலும் பயங்கர ஆயுதங்கள்!" டெல்லி அனுமன் ஜெயந்தி ஊர்வல வன்முறை..நடந்தது என்ன?
டெல்லி: தலைநகர் டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
நேற்றைய தினம் நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் ஜஹாங்கிர் பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நேற்றைய தினம் நடைபெற்றது.
அப்போது திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில் இரு தரப்பிற்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் வன்முறை
இதில் அங்கு இருந்த பலரும் காயமடைந்தனர். அங்குள்ள வாகனங்களும் கூட அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், நிலைமையைச் சமாளிக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், போலீசார் மீதும் கூட சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்த இடம் முழுக்க போர்க் களம் போலக் காட்சி அளித்தது. இப்போது தான் சூழல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

3 ஊர்வலங்கள்
நேற்றைய தினம் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு மொத்தம் மூன்று ஊர்வலங்கள் நடந்துள்ளன. கடைசியாக நடந்த ஊர்வலத்திற்கு போலீசாரிடம் இருந்து எவ்வித அனுமதியும் வாங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த அனுமதி வழங்கப்படாத ஊர்வலத்தில் தான் பிரச்சினை ஏற்பட்டது. இந்த ஊர்வலம் கோவிலுக்கு அருகில் உள்ள மசூதி வழியாக வேண்டுமென்றே சென்றதாகக் கூறப்படுகிறது.

திடீர் மோதல்
ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் காவிக் கொடிகளை ஏந்தியபடி, மசூதியைக் கடந்து சென்றுள்ளனர். அப்போது சிலர் முஸ்லீம் பிரார்த்தனை அழைப்பு மத முழக்கங்களுக்கு எதிராக உரத்த ஒலியில் கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதன் காரணமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் மசூதியில் இருந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக வெடித்துள்ளது.

ஆயுதங்கள்
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்திற்கு வந்தவர்கள் ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் அவர்கள் மசூதியைச் சேதப்படுத்த முயன்றதாக அப்பகுதி முஸ்லிம்கள் கூறியுள்ளனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தாங்கள் ஆயுதங்கள் எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர். ஆனால் வன்முறைக்குக் காரணம் முஸ்லிம்கள் தான் என்றும் அவர்கள் முதலில் கற்களை வீசி தாக்கத் தொடங்கியதாலேயே வன்முறை ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

போலீஸ் ஆக்ஷன்
இதற்கிடையே உரிய அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விஎச்பி செயல்பாட்டாளரான பிரேம் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வன்முறையின் போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

தலைமறைவு
இந்த வன்முறையில் ஈடுபட்ட பலரும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணியையும் போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், "இந்த விவகாரத்தில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தவறு செய்திருந்தால், அவர் எந்த வகுப்பு, மதம், சமூகமாக இருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸ் நடவடிக்கை
சிலர் சமூக ஊடகங்கள் மூலம் அமைதியைச் சீர்குலைக்க முயல்கின்றனர். நாங்கள் சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வதந்திகளுக்குச் செவிசாய்க்க வேண்டாம்" என்று தெரிவித்தார். கடந்த வாரம் கூட ராம் நவமி கொண்டாடத்தின் போது குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வன்முறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications