ஆதவனை நோக்கி ஆதித்யா எல்1.. கடைசி 2 நிமிடங்கள் திக் திக்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை கவனிச்சீங்களா?
டெல்லி: சூரியனில் ஆய்வு நடத்துவதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட போது கடைசி 2 நிமிடங்களில் நடந்தது என்ன?
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது. தற்போது நிலவில் தரையிறங்கிய ரோவர் நிலவை சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்து ஆய்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த தகவல்களை லேண்டர் பூமிக்கு அனுப்புகிறது.

இதுவரை நிலவில் மாங்கனீஸ், சல்பர், இரும்பு, கால்சியம், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை இருப்பதாக ரோவரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் இன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தினர்.
இதற்கான கவுன்ட்டவுன் நேற்றே கொடுக்கப்பட்டது. சரியாக காலை 11.50 மணிக்கு நெருப்பை கக்கிக் கொண்டு விண்ணில் பாய்ந்தது. இது சுமார் 4 மாதங்கள் கழித்து சூரியன்- பூமி இடையே 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியான எல் 1 ஐ சுற்று வட்ட பாதையில் விண்கலம் நிலை நிறுத்தப்படும். இந்த புள்ளியை சுற்றியுள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்படும்.
எல் 1 இல் உள்ள துகங்கள் மற்றும் புலங்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும் சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவை பற்றி ஆய்வு செய்யும். தற்போது பிஎஸ்எல்வி ராக்கெட்டை விட்டு ஆதித்யா எல் 1 அதன் இலக்கை அடைய பிரிந்து சென்றுவிட்டது.
இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவும் நிகழ்வை இந்தியாவில் உள்ள குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என கண்டு மகிழ்ந்தனர். சிலர் வெளிமாநிலங்களில் இருந்து கூட சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு வருகை தந்தனர். அந்த வகையில் ஒருவர் மும்பையில் இருந்து ஆதித்யா எல்1ஐ பார்க்க வந்திருந்தார்.
இப்படி இந்தியாவே பெருமைப்படும் அளவுக்கு நடந்த இந்த ராக்கெட் லாஞ்சின் போது நடந்தது என்ன என்பதை பார்ப்போம். இன்று காலை 11.50 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 2 நிமிடங்களின் போது விஞ்ஞானிகள் சற்று பதற்றத்துடனேயே இருந்தனர். அதிலும் இஸ்ரோ தலைவரப் சோம்நாத் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதும் சோம்நாத் விஞ்ஞானிகளை பாராட்டினார்.












Click it and Unblock the Notifications